வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் எடுத்திருந்த போது தான் மிகவும் சோர்வு அடைந்திருந்ததாக கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி 120 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். ஒருநாள் போட்டியில் ஒரு அணிக்கு எதிராக வேகமாக 2000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.
தனது 79வது ரன்னை எட்டிய போது, சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியை (11,363 ரன்கள், 311 போட்டி) முந்தி 8வது இடம் பிடித்தார். இதுவரை இவர், 238 போட்டியில், 42 சதம், 54 அரைசதம் உட்பட 11,406 ரன்கள் குவித்துள்ளார். முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் (18,426 ரன்கள், 463 போட்டி) உள்ளார்.
நேற்று போட்டி முடிந்ததும் விராட் கோலியுடம் சாஹல் பேட்டி எடுத்தார். அப்போது, சாஹல் டிவிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி ஸ்வாரஸ்யமான பல விஷயங்களை பேசியுள்ளார். “நல்ல இசை கேட்கும் போது என்னுடைய தலை உற்சாக மடைந்துவிடும். அப்போது நான் நடனமாடுவது போல் உணர்வேன். களத்தில் எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்க விரும்புவேன். நான் கேப்டனாக இருந்தாலும், இல்லையென்றாலும் கவலைப்பட மாட்டேன். நாட்டிற்காக விளையாடக் கூடிய அற்புதமான வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார். அதனால், ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாட வேண்டும்.
மழையால் இன்றைக்கு(நேற்று) மிகவும் சிரமமாக இருந்தது. ஆடுகளம் வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருந்தது. உண்மையில், 65 ரன்கள் எடுத்திருந்த போது நான் களைப்படைந்துவிட்டேன். ஆனால், ஆட்டத்தின் நிலைமை அணிக்காக என்னை விளையாட நிர்பந்தித்தது. ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆட்டமிழந்த பிறகு, நான் களத்தில் இருக்க வேண்டிய தேவையிருந்தது” என்று விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 42வது சதமடித்தார். இதன்மூலம் இவர், சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் (49 சதம்) தொடர்கிறார்.