இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய பிறகு, செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்பார்கள் என்று ஜேசன் பெஹ்ரண்டொர்ப் நினைத்திருப்பார். போட்டி முடிந்தவுடன் அவரிடம் WWE வீரர் ஜான்சீனாவை பற்றி ஒரு கேள்வி கேட்டபோது பெஹ்ரண்டொர்ப் சிரித்துவிட்டார்.
இந்தியாவுடன் பல வருடங்கள் கழித்து டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற உதவியாக இருந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரண்டொர்ப், போட்டி முடிந்தவுடன் செய்தியாளரை சந்தித்தார். முதல் போட்டியில் மழை குறிக்கிட்டாலும், இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அவர் யார் என நிரூபித்தார்.
முதல் ஓவரிலேயே இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கேப்டன் விராட் கோலியை அவுட் செய்தார். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் ஷிகர் தவான் மற்றும் மனிஷ் பாண்டேவின் விக்கெட்டுகளையும் எடுத்துவிட்டார். இதனால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 118 ரன் மட்டுமே எடுத்தது.
அந்த எளிதான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, தொடக்கத்திலேயே டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் விக்கெட்டை இழந்தது. ஆனால், ஹென்றிக்ஸ் மற்றும் ஹெட் ஜோடி சிறப்பாக விளையாடி வெற்றியை ருசித்தார்கள்.
நான்கு விக்கெட் எடுத்து அசத்தியதால், அவருக்கு ஆட்டநாயகன் விருது அளித்தார்கள். போட்டி முடிந்தவுடன் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
“நீங்களும் மல்யுத்த வீரர் ஜான்சீனாவும் ஒரே மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்,” என செய்தியாளர் கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டு முடிப்பதற்கு முன்பே பெஹ்ரண்டொர்ப் சிரித்துவிட்டார்.
“அதை பற்றி நீங்கள் கேள்விபட்டதுண்டா?” என செய்தியாளர் கேட்டார்.
“இல்லை, நான் இதுவரை கேட்டதில்லை. ஆனால் உண்மை என்றால், அவர் என்னை விட பயங்கரமாக இருப்பார்,” என பெஹ்ரண்டொர்ப் கூறினார்.
அந்த காட்சியை பாருங்கள்: