நாளை வெற்றி பெறவே பார்ப்போம் : சிகர் தவான்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்களில் சுருண்டது. இலங்கை முதல் இன்னிங்சில் 294 ரன்கள் சேர்த்தது.

122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 4-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போதுவரை 49 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 95 ரன்னில் அவுட்டாகி சதத்தை தவறவிட்ட தவான், கடைசி நாளில் வெற்றிக்காக விளையாடுவோம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘நல்லது மற்றும் கெட்டது என்ற இரண்டு பீலிங்கும் உள்ளது. நிச்சயமாக செஞ்சூரியை நெருங்கி, அவுட்டாகும்போது ஏமாற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஆட்டத்தில் நாங்கள் சிறப்பான நிலைக்கு வந்ததன் மூலம் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.

நாளைக்கு பாசிட்டிவ் ஆன நோக்கத்துடன் களம் இறங்குவோம். அதை போட்டியில் செயல்படுத்த முயற்சி செய்வோம். வெற்றிக்காகத்தான் நாளை களம் இறங்குவோம்’’ என்றார்.

Editor:

This website uses cookies.