உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகிற வெள்ளிக்கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. சுமார் இரண்டு வருடங்களாக அப்படியே வந்து டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு அணிகள் என்கிற அடிப்படையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மோத தயாராக இருக்கின்றன.
நியூசிலாந்து அணிக்கு தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் வேளையில், இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. தற்பொழுது இந்திய அணி வீரர்கள் செய்தியாளர் சந்திப்பில் ஒரு சில விஷயங்களை கூறியிருக்கின்றனர்.
50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை விட இது மிகவும் பெரியது – இசாந்த் சர்மா
இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா தற்போது நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை விட மிகப் பெரியது என்று கூறியிருக்கிறார். இதற்கான எதிர்பார்ப்பு உலக அளவில் அதிகரித்துக் கொண்டு வருவதாகவும், மேலும் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெறும் நோக்கத்துடன் விளையாடி வருவதாகவும் கூறி இருக்கிறார்.
அவர் கூறியதை முகமது சமி வழி மொழிந்து, நிச்சயமாக இது மிகப்பெரிய போட்டியாக அமையப் போகிறது. கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்த போகிறது என்றும் கூறியிருக்கிறார்.
இரண்டு வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு இது – விராட் கோலி
ஒரு மாதத்தில் கிடைத்த வெற்றி அல்ல இது இரண்டு வருடங்களாக நாங்கள் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறோம். கொரோனோ காலகட்டத்தில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் மனதளவில் மிக தைரியமாக செயல்பட்டு இந்த அளவுக்கு வந்து இருக்கின்றனர். ஒவ்வொரு டெஸ்ட் போட்டிகளிலும் மிக சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் மட்டுமே இந்த இறுதிப் போட்டிக்கு நாங்கள் தகுதி அடைந்துள்ளோம்.
குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய எங்கள் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டு வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசை வீணடிக்க நாங்கள் விரும்ப மாட்டோம். நிச்சயமாக இறுதிப் போட்டியில் ஒரு அணியாக இணைந்து மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் நோக்கத்தோடு விளையாடுவோம் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.