இந்திய அணியின் வெற்றிக்கு யார் முக்கிய காரணம் என்பதை போட்டி முடிந்த பிறகு பேசியுள்ளார் ரோகித் சர்மா.
தென்னாப்பிரிக்கா ஆணியுடன் நடைபெற்ற முதல் டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்கள் கண் மூடி திறப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகள் விழுந்தது.
முதல் ஓவரில் ஒரு விக்கெட், இரண்டாவது ஓவரில் மூன்று விக்கெட்ஸ், மூன்றாவது ஓவரில் ஒரு விக்கெட் என வெறும் ஒன்பது ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் விழுந்துவிட்டது. அதன் பிறகு உள்ளே வந்த பர்னெல் மற்றும் மார்க்ரம் இருவரும் சிறிது நேரம் ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்தது.
மார்க்ரம் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பர்னெல் 24 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசி வரை போராடிய மகாராஜ் 35 பந்துகளில் 41 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை மூன்று இலக்கமாக மாற்றினார். 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை தென்னாப்பிரிக்க அணி எடுத்திருந்தது.
அதன் பிறகு களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் படுமோசமாக அமைந்தது. ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி வெறும் மூன்று ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். மிகவும் நிதானமாக பக்குவத்துடன் விளையாடினார் கே எல் ராகுல். இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு உள்ளே வந்த சூரியகுமார் யாதவ் யாருக்கும் அஞ்சாமல் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தி, பௌண்டரி மற்றும் சிக்ஸர்களாக விலாசினார்.
33 பந்துகளில் அரை சதம் கடந்த இவர், ஐந்து பவுண்டர்கள் மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். மறுமுனையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்ட கேஎல் ராகுல் 56 பந்துகளில் 51 ரன்கள் அடித்து நங்கூரம் போல இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்றார். 16.4 ஓவர்களில் 110 ரன்கள் அடித்த இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு போட்டி அளித்த கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “மைதானம் சற்று குழப்பமானதாக இருந்தது. இது போன்ற போட்டிகளில் தான் நாம் நிறைய கற்றுக் கொள்ள முடியும். தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் 20 ஓவர்கள் வரை செல்லும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. துவக்கத்தில் செய்த தவறை திருத்திக் கொண்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் விளையாடினார்கள். மைதானத்தில் இன்னும் அந்த ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கிறது.
பந்துவீச்சில் தீபக் சகர் மற்றும் அர்த்ததீப் சிங் இருவரும் திகைக்க வைத்துவிட்டார்கள். கண்மூடி திறப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. பந்துவீச்சில் இவர்கள் இருவரும் நன்றாக செயல்பட்டார்கள் என்றால், பேட்டிங்கில் கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் மிகவும் முதிர்ச்சியுடன் விளையாடினார்கள. இது போன்ற மைதானத்தில் விக்கெட் இழக்காமல் விளையாடுவது என்பது எளிதல்ல. அதுவும் வேகமாக இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு. ஒட்டு மொத்த அணியாக நன்றாக செயல்பட்டதில் மகிழ்ச்சி.” என்றார்.