அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த, இந்த மூன்று வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று இர்பான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் மாதம் நடைபெற இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது, இதற்காக ஒவ்வொரு அணிகளும் சிறந்த அணியை கட்டமைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது.

அதே போன்று இந்திய அணியும் தற்பொழுது நடைபெறும் தொடர்களின் மூலம் எந்தெந்த வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பயன்படுவார்கள் என்பதை பரிசோதித்து வருகிறது.
இந்தநிலையில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு முன்,2022 டி20 உலக கோப்பை தொடர் குறித்து விவாதித்த இர்பான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா நிச்சயம் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து அவர்கள் பேசுகையில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 3 வீரர்களும் 15 வீரர்களை கொண்ட உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார்கள், இதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த 3 வீரர்களும் அணியில் இருப்பதால் விராட் கோலியுடன் சேர்ந்து துவக்க வீரராக பயன்படுத்தலாம் அல்லது கேஎல் ராகுல் உடன் இவர்களை மிடில் ஆர்டர்களிலும் பயன்படுத்தலாம், இதன் காரணமாக இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக மாறும்.

மேலும் பேசிய இவர்கள்,கே எல் ராகுல் இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயன்படுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் மிடில் ஆர்டர்களில் இடது கை பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு தேவை என்பதால், ரிஷப் பண்ட் அந்த தேவையை பூர்த்தி செய்வார் என்றும் இவர்கள் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.