“பாபர் அசாம் தனது கேப்டன் பொறுப்பிலும் பேட்டிங்கிலும் இப்படி ஒரு பொறுப்புணர்வை எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும்.” என்று அறிவுறுத்தியதோடு, சில முன்னால் ஜாம்பவான்களையும் குறிப்பிட்டு உதாரணமாக பேசியுள்ளார்.
உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி மீண்டும் தனது வரலாற்றை தக்கவைத்து தொடர்ந்து 8ஆவது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. டி20 உலககோப்பையில் முதல்முறையாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.
இம்முறை ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பையில் அதை செய்ய முடியவில்லை. இதனால் பாபர் அசாம் தனது கேப்டன் பொறுப்பிற்கும் பேட்டிங்கிற்கும் சில விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது நன்றாக விளையாடி 50 ரன்கள் அடித்திருந்தார். தவறான நேரத்தில் இவர் ஆட்டம் இழந்த பிறகு, 155 ரண்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி 191 ரன்கள் ஆல் அவுட் ஆனது.
அப்போது பாபர் அசாம் தனது கேப்டன் பொறுப்பில் சரிவர செயல்படவில்லை,பேட்டிங்கிலும் பொறுப்புணர்வுடன் எடுத்துச் செல்லவில்லை என்று விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர். அவர் பேசியதாவது:
“பாகிஸ்தான் அணி பல வரலாற்று சிறப்புமிக்க அதிரடி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. உதாரணமாக சாகித் அப்ரிடி, இம்ரான் நசீர், சயீத் அன்வர் மற்றும் அமீர் சஹையில் ஆகியோரை கண்டிருக்கிறோம். இப்போது இருக்கும் அணியில் அதுபோன்ற அதிரடி வீரர்கள் இல்லை. அந்த நேரத்தில் பாபர் அசாம் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்.
பாபர் அசாம் அரைசதம் அடித்திருக்கலாம். ஆனால் அதை வைத்துக்கொண்டு அணியின் வெற்றிக்கு உதவியதா? என்று பார்த்தால், கிடையாது!. உதாரணமாக 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பைனலில் தலைசிறந்த வாசிம் அக்ரம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார் ஐந்து விக்கெட்டுகளை ஒன்றும் எடுக்கவில்லை. ஆனால் அந்த மூன்று விக்கெட்டுகள் தான் மிகச்சிறந்தது. அதுபோன்று சதம், அரைசதம் எல்லாம் புள்ளிவிவரங்களுக்காக மட்டுமே தவிர அணியின் வெற்றிக்கு அது எந்த வகையில் உதவியது என்பதுதான் முக்கியமாக பார்க்க வேண்டும்.” என்றார்.