இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 16 ஓவர்களில் 87 ரன்களுக்கு சுருண்டது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை பந்துவீச, முதலில் பேட் செய்த இந்தியாவில் ரோஹித் சர்மா-லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவருமே சற்று நிதானமாக ஆடிய நிலையில் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள் உள்பட 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் மேத்யூஸ் பந்துவீச்சில் சமீராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் களம் புகுந்தார். இந்நிலையில், மேத்யூஸ் வீசிய 6-ஆவது ஓவரின் முதல் பந்து லோகேஷ் ராகுலின் லெக் பேடில் பட, அதற்கு எல்பிடபிள்யூ கொடுத்தார் நடுவர். எனினும், டிஆர்எஸ் (நடுவர் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு) முறையின் மூலம் ராகுல் ஆட்டமிழக்கவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து இலங்கை பந்துவீச்சை சிதறடிக்கத் தொடங்கினார் ராகுல். அவர் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அரைசதத்தை எட்டினார்.
மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ஷ்ரேயஸ் ஐயர் இந்தியா 100 ரன்களை கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த அவர், நுவான் பிரதீப் வீசிய 12-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்தார்.
பின்னர் தோனி களம் கண்ட நிலையில், 48 பந்துகளுக்கு 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 61 ரன்களுக்கு வெளியேறினார் லோகேஷ் ராகுல். அவர் திசர பெரேரா பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மணீஷ் பாண்டே, தோனியுடன் இணைய, அந்த ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை விறு விறுவென உயர்த்தியது.
இவ்வாறாக 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது இந்தியா. தோனி 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 39 ரன்களுடனும், மணீஷ் பாண்டே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் மேத்யூஸ், திசர பெரேரா, விஷ்வா ஃபெர்னான்டோ தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 181 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இலங்கை அணியில் உபுல் தரங்கா மட்டும் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். டிக்வெல்லா 13, குசல் பெரேரா 19, சமீரா 12 ரன்களில் வெளியேறினர். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, 87 ரன்களுக்கு சுருண்டது இலங்கை. இந்திய தரப்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்திய யுவேந்திர சாஹல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற சகால் கூறியதாவது :
நான் பந்து வீச துவங்கிய போது ஓர் குக்கப்பமாக இருந்து. எனக்கு எப்பொடி பீல்டிங் செட் செய்வது எனத் தெரியவில்லை. என் முதக் ஓவரின் 3ஆவது பந்தில் தரங்காவின் விக்கெட்டை எடுத்தவுடன், இடது கை பேட்ஸ்மேனுக்கு கூக்ளி மற்றும் லெக் ப்ரேக் பந்துகளாக போட்டேன்.
நானும் குல்தீப் யாதவும் பார்ட்னர்ஷிப் போட்டு பந்து வீசுவோம், நாங்கள் ஈரமான பந்தினைக் கொண்டு வீச பழகியுள்ளோம். இதனால், நேற்று பந்தில் ஈரம் இருந்தபோது எங்களுக்கு பெரிதாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த ஆட்டநாயகணன் விருது பெற காரணம் மஹி(தோனி) மற்றும் மணீஷ் தான். அவர்கள் தான் ஆட்டத்தை இந்திய அணியின் கையில் வைத்து கொடுத்தார்கள்.
எனக் கூறினார் ஆட்டநாயன் விருது வென்ற சகால்.