ராஞ்சியில் வெற்றி இலக்காக எதை நிர்ணயம் செய்தாலும் அதை அடைந்திருப்போம்: ஷிகர் தவான்

வெற்றி இலக்காக எதை நிர்ணயம் செய்திருந்தாலும் ராஞ்சி மைதானத்தில் அந்த இலக்கை அடைந்திருப்போம் என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி மழை குறுக்கிட்டதால் 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. ஆரோன் பிஞ்ச் சிறப்பாக விளையாடி 30 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் ஆட்டம் முடிந்தது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எங்களுக்கு பெரியளவில் ரன்கள் தேவைப்படவில்லை என்றாலும் முதலில் விக்கெட் விழுந்த நிலையில் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை அடைவது சற்று கடினம் தான். ஆனால் நாங்கள் எவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயம் செய்திருந்தாலும் அதை அடைந்திருப்போம்.
உள்ளூர் நாயகன் தோனி ஆடாதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றிருப்பார்கள் என நினைக்கிறேன். இப்போதுள்ள வலிமையான இந்திய அணியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.