தோனி பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது வென்ற துணிச்சலான ராணுவ அதிகாரிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய டிவி நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி நடந்து முடிந்த ஒருநாள் உலககோப்பைக்கு பிறகு, இந்திய அணியில் இருந்து விடுப்பு ராணுவ பயிற்சிக்கு சென்றார். அதன்பிறகு, மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் 2 மாதங்கள் விடுப்பு எடுத்து குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவீர்கள் என மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “ஜனவரி மாதம் வரை என்னிடம் இதுகுறித்து கேட்காதீர்கள்” என பளிச் பதிலை அளித்தார்.
இந்தியாவுக்கு மூன்று வித கோப்பையான 2007ல் டி–20 உலகக்கோப்பை, 2011ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று தந்தவர் தோனி ஆவார். மேலும், ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்கு 2010, 2011, 2018 ஆகிய மூன்று முறை கோப்பையை வென்று தந்துள்ளார்.

இவருக்கு இந்திய ராணுவத்தில் இருந்து கவுரவ ‘லெப்டினன்ட் கர்னல்’ பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தோனி, பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது வென்ற துணிச்சலான ராணுவ அதிகாரிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய டிவி நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க உள்ளார். இது, இவரது முதல் ‘டிவி’ நிகழ்ச்சி ஆகும்.
தோனி நடந்துகொள்ளவது அனைத்தையும் வைத்து பார்க்கையில், இவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பாமல் தொடர்ந்து ராணுவத்திற்கே சென்றுவிடுவார் போலும் என வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

எப்படியானாலும், ஜனவரி மாதத்திற்கு பிறகு தோனி ஓய்வு குறித்த முழு அறிவிப்பும் வெளிவரும் எனவும் தெரியவருகிறது.