இந்தியாவைவிட வெளிநாட்டு மைதானங்களில் அதிக சதங்கள் அடித்ததற்கு காரணம் இதுதான் என்று கே எல் ராகுல் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார் கேஎல் ராகுல். இவர் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெஸ்ட் அரங்கில் இவருக்கு இது 7வது சதம் ஆகும். அதில் 6 சதங்கள் வெளிநாட்டு மைதானங்களில் அடிக்கப்பட்டவை.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு சதங்கள், ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் ஒரு சதம் என அனைத்தும் வெளிநாட்டு மைதானங்களில் அடிக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு சதத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 199 ரன்கள் அடித்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்சமாக இது இருக்கிறது.
இந்தியாவை விட வெளிநாட்டு மைதானங்களில் கே எல் ராகுல் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று இவரது புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் கேஎல் ராகுல் இடம் பெற்றிருந்தார். அந்தத் தொடரில் இவர் ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் ஆகவும் இருந்தார். அதே தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு சதம் உட்பட, மேலும் இரண்டு அரைசதங்களும் அடித்திருக்கிறார்.
இந்திய மைதானங்களில் இல்லாத அளவிற்கு வெளிநாட்டு மைதானங்களில் அதிக சதங்கள் அடிக்க இதுதான் காரணம் என்று விவரித்திருக்கிறார் கேஎல் ராகுல். அவர் கூறுகையில், “எனது பேட்டிங் ஸ்டைலுக்கு வெளிநாட்டு மைதானங்களில் பந்துகள் அடிக்க ஏதுவாக இருக்கிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளில், நிறைய நேரங்களில் களத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே போதிய அளவு ரன்கள் அடிக்க முடியும். நீண்ட நேரம் களத்தில் நிற்பதற்கு மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். இதன் மூலம் நல்ல துவக்கம் கிடைத்துவிடும். நல்ல துவக்கம் கிடைத்த பிறகு, அமைதி மற்றும் நிதானம் இரண்டையும் கொண்டு நீண்ட நேரங்கள் களத்தில் நின்று ரன் குவிப்பில் ஈடுபடலாம்.
வெளிநாட்டு மைதானங்களுக்கு என்று எனது ஆட்டத்தில் பிரத்தியேக மாற்றங்களை செய்துள்ளேன் என அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. மனதளவில் என்னை நான் தயார் படுத்திக் கொண்டேன். அதுதான் எனக்கு உதவிகரமாக இருக்கிறது. நன்றாக விளையாடி வருவது எனக்கு பெருமிதமாகவும் இருக்கிறது.” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு மைதானங்களில் அதிக சதங்கள் அடித்த துவக்க வீரர்கள் பட்டியலில், கவாஸ்கருக்கு அடுத்தபடியாக கேஎல் ராகுல் இருப்பது குறிப்பிடத்தக்கது.