ஆட்டநாயகன் விருது பெற்ற சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ் இருவருக்கும் அடுத்த போட்டியில் இடம் கிடைக்காதது குறித்து தனது கேள்வியை எழுப்பியுள்ளார் கபில் தேவ்.
வங்கதேசம் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் அபாரமாக செயல்பட்ட குல்தீப் யாதவ் அதே போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். துரதிஷ்டவசமாக அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனில் எடுக்கப்படாமல் வெளியில் அமர்த்தப்பட்டார்.
அதேபோல் இலங்கை அணியுடன் நடைபெற்ற டி20 தொடரின் கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்து, டி20 போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்த சூரியகுமார் யாதவ், ஆட்டநாயகன் விருதை பெற்றார். அதற்கு அடுத்ததாக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்படவில்லை.
இப்படி வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் அடுத்த போட்டிகளில் வெளியில் அமர்த்தப்படுவது அவர்களின் நம்பிக்கையை மிகவும் பாதிக்கும் என்கிற விமர்சனங்கள் முன்னாள் வீரர்கள் பலரால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் இப்படி வெளியில் அமர்த்தப்படுவது சரியா தவறா? என்பது குறித்து கபில் தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறியதாவது:
“என்னை பொருத்தவரை மூன்றுவித போட்டிகளுக்கும் ஒரே மாதிரியான அணி இருப்பது மிகவும் சிறந்தது. அப்போதுதான் வீரர்கள் மத்தியில் நல்ல புரிதல் ஏற்படும். அனுபவமும் கிடைக்கும். அதற்கேற்றவாறு சிறந்த வீரர்களை, மூன்று விதமான போட்டிகளில் விளையாட கூடிய வீரர்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் ஒரு வீரர் அல்லது இரண்டு வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், அவர்களுக்கு பதிலாக மற்ற வீரர்கள் உள்ளே எடுத்து வரப்படலாம். இப்படி சிறந்த ஃபார்மில் இருக்கும் வீரர்களை மற்ற போட்டிகளில் பயன்படுத்தவில்லை என்றால் அவர்களது சிறந்த ஆட்டத்திற்கு உரிய மரியாதையாக இருக்காது. இது அல்ல அவர்களது நம்பிக்கையையும் குறைத்து விடும்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “தற்போது இந்திய அணி நிர்வாகத்திடம் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். இதை வைத்து ஒவ்வொரு விதமான போட்டிக்கும் ஒவ்வொரு விதமான அணியை உருவாக்கிக் கொள்ளலாம். டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என்று தனித்தனி அணியை உருவாக்கி அதற்கென தேர்ந்த வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டால் மற்ற வீரர்களுக்கு பாதிப்பாக இருக்காது.” எனவும் அறிவுறுத்தினார்.