இங்கிலாந்து உடனான கிரிக்கெட் தொடர் துவங்கும் தேதி அறிவிப்பு? – ரசிகர்களுக்கு ஜாலி!
கொரோனா காரணமாக பாதியில் தடைபட்ட இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் வரக்கூடிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடந்த மார்ச் மாதம் பங்கேற்க இருந்தது. இதற்குத் தயாராகும் வகையில் பயிற்சி போட்டியிலும் பங்கேற்றது.

ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததன் காரணமாக பயிற்சி போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. 10 நாட்கள் இலங்கையில் இருந்த இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரை ரத்து செய்து விட்டு, நாடு திரும்பியது.
இதுதவிர உலகம் முழுவதும் நடைபெறவிருந்த பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் உடனடியாக ரத்தாகின.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வா செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் தெரிவித்ததாவது,

“இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு மாற்றியுள்ளோம். இதற்கான தேதிகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அதேபோல ஒத்தி வைக்கப்பட்ட தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர், இந்தியா உடனான தொடரை (ஜூன்–ஜூலை), வங்கதேச அணியுடனான தொடர் (ஜூலை–ஆக.,) என இதர தொடர்களையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டி தேதிகள் குறித்து பேசி வருகிறோம்” என அவர் கூறினார்.
இந்தியா-இங்கிலாந்து தொடர்:

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இங்கிலாந்து அணி செப்டம்பர் மற்றும் அக்டொபர் மாதங்களில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கவிருந்தது. தற்போது அந்த தொடரும் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பிசிசிஐ தரப்பிலிருந்து சில தினங்களுக்கு செய்திகள் வெளியாகின.