இத்தனை மாதம் இனி கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டிகள், பயிற்சிகள் நடக்காது; அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட கங்குலி
இன்னும் இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடக்காது என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாளொன்றிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக, மார்ச் மாத இறுதியில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் இங்கிலாந்து அணி விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு தயாராகி வருகிறது. இந்த தொடர் வருகிற ஜூலை 8ஆம் தேதி துவங்குகிறது. விண்டீஸ் உடனான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆடவிருக்கிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி கடந்த 28ஆம் தேதி இங்கிலாந்து சென்றது.
இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் எப்போது வீரர்களுக்கான பயிற்சி மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே வந்தனர். இந்தியாவில் பயிற்சிகள் தொடங்குவது குறித்து பிசிசிஐ உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட புதிய முடிவினை இன்று வெளியிட்டுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், “இந்தியாவில் தற்போது வைரஸ் தாக்கம் உச்சம் பெற்றுவருகிறது. இந்த சூழலில் வீரர்களுக்கு பயிற்சிகளை துவங்கினால், அது அவர்களுக்கு ஆபத்தாக கூட முடியலாம். பல வீரர்கள் வைரஸ் தோற்று அதிகமாக பரவும் மாநிலங்களில் இருக்கிறார். இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில், இந்தியாவில் கிரிக்கெட் பயிற்சிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக துவங்காது. அதற்க்கான யோசனைகளும் இல்லை.” என்றார்.
இதற்கிடையில், டி20 உலகக்கோப்பை நடக்கவில்லை என்றால், அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.