சவுத்தாம்டனில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் மோசமாகத் தோல்வி அடைந்து தொடரை இழந்த இந்திய அணியை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவை இன்னும் ஆல்-ரவுண்டர் என்று கூப்பிட வேண்டுமா என்று சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்திய அணி ஒருபோட்டியிலும் வென்று 2-1 என்ற நிலையில் இருந்தன. இந்நிலையில், சவுத்தாம்டனில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் 60 ரன்களில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
245 ரன்கள் இலக்கு வைத்துக் களமிறங்கிய இந்திய அணிக்குத் தொடக்க வீரர்கள் ராகுல், தவண், புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், 4-வது விக்கெட்டுக்கு இணையான கோலி, ரஹானே கூட்டணி 100 ரன்கள் சேர்த்து அணியை நம்பிக்கைப் பாதையில் பயணிக்க வைத்தனர். ஆனால், கோலி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தபின், இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்தது. ரஹானே அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
ஆல்ரவுண்டர் என்ற அடைமொழியில் விளையாடிவரும் ஹர்திக் பாண்டியா டக் அவுட்டிலும், அஸ்வின் விரைவாகவும் ஆட்டமிழந்தார். இதனால், 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பரிதாபத் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் மோசமான பேட்டிங் குறித்து முன்னாள் வீரரும், கேப்டனுமான சுனில் கவாஸ்கர் தொலைக்காட்சி வர்ணணையில் கடுமையாக விளாசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்களோடு களமிறங்கியும், பயனில்லை, பணிந்துவிட்டது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் விராட் கோலி என்ற ஒற்றை வீரரை நம்பி மட்டும் அணி இருக்கக் கூடாது. அனைத்து வீரர்களும்தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி, சதம் அடித்து அணியை வெற்றி பெறவைக்க முடியுமா?. அவரும் மனிதர்தானே. தொடக்க வரிசையில் களமிறங்கிய ஷிகர் தவண், ராகுல், புஜாரா ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்துவிட்டு, கடைசி வரிசையில் களமிறங்கிய டெயில்என்டர்களிடம் வெற்றிக்கான 60 ரன்களை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். ரஹானா, கோலி கூட்டணி 100 ரன்களுக்கு மேல் சேர்த்துக் கொடுத்தனர். கடைசி வரிசை வீரர்களிடம் 70 ரன்கள் வரை எதிர்பார்ப்பது அதிகமாகும்.
இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த கவனமும், விராட் கோலி மீதுமட்டுமே இருந்தது, அவரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் அணியின் நம்பிக்கையை உடைத்துவிடலாம் எனத் தெரிந்து விளையாடினார்கள். அது சாதகமாக அமைந்துவிட்டது.

Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS
அதுமட்டுமல்லாமல், சவுத்தாம்டன் ஆடுகளத்தில் பந்துகள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்விங் ஆகவில்லை என்பதை கவனித்தேன். எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் மைதானத்தில் பந்துகள் பந்துவீச்சாளர்கள் சொல்படி, கேட்டு ஸ்விங்ஆகும், இதனால், பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு விளையாடுவது கடினமாக இருக்கும். ஆனால், சவுத்தாம்டனில் அந்தவகையில் பேட்மேன்களுக்கு தொந்தரவில்லாத ஆடுகளமாக இருந்தபோது, தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து விளையாடி இருக்க வேண்டும்.
இன்னும், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என்று கூப்பிட வேண்டுமா. நீங்கள் வேண்டுமானால், ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர் என்று கூப்பிடுங்கள், யார் வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். ஆனால், நான் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராகவே நினைக்கவில்லை
இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
ஹர்திக் பாண்டியா ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பாகப் பந்துவீசுவதையும், பேட் செய்வதையும் பார்த்து அவரை கபில்தேவுக்கு ஒப்பாகப் பேசினார்கள். ஆனால், கபில்தேவின் சாதனையை எட்ட இன்னும் ஏராளமான தொலைவை கடக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியதும் அந்த பேச்சு அடங்கியது.
அதற்கு ஏற்றார்போல், ஹர்திக் பாண்டியாவும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பினார். பின் 3-வது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகள் எடுத்தவுடன் மீண்டும் ஹர்திக்பாண்டியாவை கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசினார்கள்.அப்போது கருத்துத் தெரிவித்த ஹர்திக் பாண்டியா, நான் கபில்தேவாக மாறவில்லை, நான் ஹர்திக் பாண்டியாவாகவே இருக்கப்போகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
அவர் சொன்னதை சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டியில் ஹர்திபாண்டியா நிரூபித்துவிட்டார். இதுதான் உண்மையான ஹர்திக்பாண்டியா பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பும் வீரர், இக்கட்டான கட்டத்தில் பேட்டிங் செய்யத் தெரியாத “சோக்கர்” (choker) என மெய்ப்பித்துவிட்டார்.