இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐபிஎல் போட்டியில் டிமாண்ட் அதிகரித்துள்ளது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி வருகிறார் ஹர்திக் பாண்ட்யா. ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார் இவர். மும்பை இண்டியன்ஸ் அணியில் அவர் இணைந்த போது அவருக்கான சம்பளமாக ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டது.
இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டபின் 2016-ல், அவருக்கான சம்பளத்தை ரூ.20 லட்சமாக உயர்த்தியது மும்பை இண்டியன்ஸ். அதே நேரம் இவரது அண்ணன் குணால் பாண்ட்யாவை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது, அதே அணி. ஆனால் இன்று பாண்ட்யா, பாபுலர் கிரிக்கெட்டர். அவர் பேட்டை தொட்டால் விசில் பறக்கிறது.

சிக்சர் அடித்தால் மைதானம் சின்னா பின்னமாகிறது கைதட்டலில். அதனால் அவரை அதிக தொகை கொடுத்து தக்க வைத்துக்கொள்ள அந்த அணி நினைக்கிறது. அதே நேரம், தான் ஏலத்தில் செல்ல இருப்பதாக பாண்ட்யா இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.
’மும்பை இண்டியன்ஸ் அணியில் அவர் விளையாட விரும்பவில்லை என்றால், அவர் கண்டிப்பாக ஏலத்துக்கு வரலாம்’ என்று கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் சிக்னல் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே விராத் கோலி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பாண்ட்யாவை இழுக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். அதோடு அந்தந்த அணிகள், ரோகித், தோனி, விராத் கோலி ஆகியோரை தக்க வைத்துக்கொள்வதில் முனைப்போடு இருக்கிறது. இருந்தாலும் இந்த வருட ஐபிஎல் போட்டியின் ஹாட் கேப் பாண்ட்யாதான்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நாளை நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாடுகிறது. தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால், தொடரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 6 தொடர்களை வென்றுள்ளது. அந்த சாதனையை தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்றை மாற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது. இரு அணி வீரர்களும் கான்பூர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.