இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக சதம் அடித்த ஹர்திக் பாண்ட்யா தனது தந்தையின் நீண்ட நாள் கனவான சொகுசு காரை வாங்கி கொடுத்துள்ளார்.
தான் இலங்கையில் இருந்தாலும் தனது அப்பாவுக்கு உடனடியாக கார் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய ஹர்திக் பாண்ட்யா, தனது சகோதரர் குணால் பாண்ட்யாவுக்கு வீடியோ கால் செய்து, அதன் மூலம் தனது அப்பாவுடன் பேசி அவர் விருப்பப்படி சிவப்பு நிற காரை வாங்கி கொடுத்து இருக்கிறார். இதனை டுவிட்டரில் ஹர்திக் பாண்ட்யா பதிவு செய்துள்ளார்.
அதில், ‘எனக்காக பல தியாகங்களை செய்த என்னுடைய அப்பாவுக்கு காரை கொடுத்து சந்தோஷப்படுத்த நினைத்தேன். அதனை இப்போது செய்துள்ளேன். எனது தந்தையின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தேன். அது எனக்கு எல்லையில்லா சந்தோஷத்தை அளித்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.