இந்திய மகளிர் அணியின் அதிரடி வீராங்கனையும், டி20 அணியின் கேப்டனுமான ஹர்மன்ப்ரீத் கவுர் போலி பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில் தொடர்புள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் டி.எஸ்.பி பதவி பறிபோகும் சூழல் வந்துள்ளது.
ரயில்வே வேலையை உதறி தள்ளிவிட்டு..

பஞ்சாப் மாநிலம் மோகாவை சேர்ந்தவர் ஹர்மன்பிரீத் கவுர். இவர் கடந்த ஆண்டு ஐசிசியின் பெண்களுக்கான உலக கோப்பை போட்டியின்போது சிறப்பாக விளையாடியதன் மூலம் அர்ஜுனா விருதை பெற்றவர். இதன் மூலம் அவருக்கு கிடைத்த மேற்கு ரயில்வே துறை பணி தனக்கு வேண்டாம் என்றும், பஞ்சாப் போலீசில் டிஎஸ்பியாக பணியாற்றவே விருப்பம் என தெரிவித்திருந்தார்.
போலி சான்றிதழ் விவகாரம்

இதையடுத்து கடந்த மார்ச் 1-ந் தேதி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், மாநில டிஜிபியாக உள்ள சுரேஷ் அரோராவும் ஹர்மன் பிரீத்துக்கு டி.எஸ்.பி பதவியினை வழங்கினர். இதற்கான சான்றிதழ் சரிபார்பதற்காக ஜலந்தரில் உள்ள பஞ்சாப் ஆயுத படை போலீஸார் மீரட்டில் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியதில் அந்த சான்றிதழில் உள்ள பதிவு எண் போலியானது என்று தெரியவந்தது.
இதனால் ஹர்மன்பிரீத் கௌர் டி.எஸ்.பி பதவி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஹர்மன்பிரீத் கௌர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆனால் விரைவில் விசாரணை நிகழும், இதுகுறித்து சம்மன் அனுப்பப்படும் என டி.எஸ்.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.