விராட் கோலி சிறப்பான பேட்ஸ்மேன் ஆக இருக்கலாம். ஆனால் மிகச்சிறந்த கேப்டன் என்று நான் எண்ணவில்லை என தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் வின்ஸ்டன் பெஞ்சமின்.
சமகால கிரிக்கெட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றையும் எடுத்து பார்த்தால் விராட் கோலி நிச்சயம் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் தனது பேட்டிங் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து தொடர்ச்சியாக ஐசிசியின் சிறந்த வீரர் என்ற விருதை பெற்று இருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளிலும், 2017 ஆம் ஆண்டு முதல் லிமிடெட் ஓவர் போட்டிகளிலும் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டார். ஒரு நாள் போட்டிகளில் 95 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று 65 போட்டிகளை வென்று தந்திருக்கிறார். டி20 களில் 50 போட்டிகளில் 30 போட்டிகளை வென்று தந்திருக்கிறார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு வழி நடத்திச் சென்றிருக்கிறார். இவர் தலைமையில் தான் இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. குறிப்பாக இரண்டு முறை கைப்பற்றி இருக்கிறது.
இந்நிலையில் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் சிறந்த கேப்டன் இல்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வின்ஸ்டன் பெஞ்சமின் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் கூறுகையில்,
“வெளிப்படையாக கூற வேண்டும் என்றால் விராத் கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் சிறந்த கேப்டன் என நான் நினைக்கவில்லை. கிரிக்கெட் இதுவரை கண்டுள்ள பல பேட்ஸ்மேன்களில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இன்றி கூறுவேன். கூறுவதற்கு முன்னால் நான் பல விமர்சனங்களை சந்திக்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும் வெளிப்படையாக கூறவேண்டும் என்றால், விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பில் ஒவ்வொரு ஆண்டுக்கும் சரிவுகளை மட்டுமே சந்தித்து இருக்கிறார். விராட் கோலியை விட மிகச் சிறந்த கேப்டன்களை இந்திய கிரிக்கெட் வரலாறு கண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில ஒப்பீடுகளை வைத்து தான் நான் அவர் சிறந்த கேப்டன் இல்லை என்று கூறுகிறேன். விராட் கோலியின் அணுகுமுறை அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதால், அவருக்கு பின்னடைவை தந்திருக்கிறது. அதுவும் ஒரு காரணம்.” என்றார்.