ஒருநாள் போட்டித் தரவரிசையிலும் இந்தியா நெ.1 !! இன்னும் டி20 மட்டும் தான் மிச்சம்

ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் விராத் கோலி 92 ரன்களும், ரஹானே 55 ரன்களும் எடுத்தனர். கவுல்டர் நைல், ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

253 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி, 44-வது ஓவரிலேயே 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 59 ரன்களும், ஸ்டோய்னிஸ் ‌62 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

இந்த 33-வது ஓவர் வரை குல்தீப் யாதவ் 7 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் வீழ்த்தவில்லை. இந்நிலையில் அருமையான ஒரு களவியூகத்தில் கோலி மீண்டும் குல்தீப் யாதவ்வை 33வது ஓவரை வீச அழைத்தார்.

மேத்யூ வேட் ஓவரை எதிர்கொண்டார். முதல்பந்தை வேட் தடுத்தாடினார். 2-வது பந்தில் குல்தீப் யாதவ் பந்தை இடது கை லெக் ஸ்பின் வீச பந்து கொஞ்சம் நன்றாகவே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றது.

நல்ல பார்மில் இல்லாத வேட் அதனை ஒரு கோணமாக பேட்டைக் கொண்டு சென்று கட் ஆட முயன்றார் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. வேட் 2 ரன்களில் வெளியேறினார்.

3-வது பந்து ஆஸ்டன் ஆகர் எதிர்கொண்டார். இது ஒரு அருமையான லூப் மிகுந்த புல்டாஸ், அதாவது ஆகரின் கண் பார்வை வட்டத்துக்குள் சிக்காமல் வந்த ஒரு மேலிருந்து வீழும் புல்டாஸ்.

அவர் பந்தை மிஸ் செய்த பிறகு பந்து கால்காப்பருகே பிட்ச் ஆகி தாக்கியது, நடுவர் கையை உயர்த்தினார். ஸ்டாய்னிஸைப் பார்த்தார் ஆகர், அவர் முகத்தில் ஒரு ரிவியூ ஆசை தெரிந்தது, ஆனால் ஸ்டாய்னிஸ் மறுக்க ஆகர் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

4-வது பந்தை புதிய பேட்ஸ்மென் பாட் கமின்ஸ் எதிர்கொண்டார். அதே ஆக்‌ஷனில் பந்தை ஸ்பின் செய்தார் குல்தீப், பந்து இம்முறை வலது கைபேட்ஸ்மெனுக்கு லெக் ஸ்பின் ஆனது, ஆனால் குல்தீப் வீசியது இடது கை கூக்ளி. பந்து மட்டையின் விளிம்பில் பட்டது தோனி விடுவாரா என்ன? மைதானம் அலறியது குல்தீப் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் இந்தியா 3-வது ஹாட்ரிக்.

ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

சென்னையில் நடந்த முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில், இன்று கொல்கத்தாவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

குல்தீப் யாதவின் ஹாட்ரிக் விக்கெட்டால் ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐந்து ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

முதல் இடத்தில் இருந்த தென்னாப்ரிக்காவை விட 3 புள்ளிகள் இந்தியா பின் தங்கியிருந்த நிலையில், இன்றைய வெற்றியின் மூலம் 119 புள்ளிகள் பெற்று இந்தியா தென்னாப்ரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Editor:

This website uses cookies.