சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடருக்கு பின் டி20 தொடர் கேப்டனாக பொறுப்பேற்க மாட்டேன் என்று விராட் கோலி அறிவித்த பிறகு, இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு 3-0 என வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. குறிப்பாக இந்திய அணியின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த கே எல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்று 80 ரன்கள் அடித்து அசத்தினார்.

உலகின் பல கிரிக்கெட் ஜாம்பவான்களும் பாராட்டும் வகையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் இந்திய அணியின் இளம் வீரர் கேஎல் ராகுல் சர்வதேச டி20 தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன்களின் ஐசிசி தரவரிசையில் 729 புள்ளி பெற்று 5வது இடத்தில் இடம் பெற்றிருக்கிறார். இதனால் கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கேஎல் ராகுல் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதேபோன்று கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமான அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி டி20 தொடருக்கான இந்திய அணியின் நம்பகமான வீரராக திகழ்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். மேலும் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன்களின் ஐசிசி தரவரிசை பட்டியலில் 24 இடங்கள் முன்னேறி 59 இடத்தில் உள்ளார்.

அதே போன்று சர்வதேச டி20 தொடருக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணியின் ஏடன் மார்க்ரம் ஆகிய மூன்று வீரர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய அணியின் விராட் கோலி முதல் 10 இடத்திற்குள் கூட இடம்பெறவில்லை என்பது கூடுதல் தகவல்.