இந்தியா எப்படியாவது செமி பைனல் போய்விட வேண்டும் என்பதற்காக ஐசிசி பாடுபடுகிறது என்று அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளார் சாகித் அப்ரிடி.
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் கடும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
பாகிஸ்தான் அணியுடன் விளையாடி போட்டியில் கடைசி ஓவரை நவாஸ் வீசினார். அதில் இடுப்புக்கு மேலே அவர் வீசியதால் நோ-பால் என நடுவர் கொடுத்தார். அது நோ-பால் இல்லை சரியான பந்து தான் என்று பலரும் பல விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் நடுவரின் தீர்ப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று ஐசிசி விதிமுறைகளை அறிந்தவர்கள் பலரும் கூறிவிட்டனர்.
தற்போது வரை பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை குற்றம் சாட்டுவதை நிறுத்தவில்லை.
அதற்கு அடுத்ததாக வங்கதேசம் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் ஒயிடு கொடுக்கப்பட்டது மற்றும் போலியாக பில்டிங் செய்த விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்காமல், மேலும் ஐந்து ரன்கள் அபராதம் விதிக்கப்படாமல் விடப்பட்டது. மைதானத்தின் ஈரப்பதம் குறையும் முன்னே ஆட்டத்தை துவங்கியது என்பன குறித்த சர்ச்சைகளும் எழுந்து இருக்கின்றன.
இந்நிலையில் இந்திய அணிக்கு சாதகமாக ஐசிசி விதிமுறைகள் மாற்றப்படுகின்றன என்று அபாண்டமாக குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், இந்திய அணி நிச்சயம் செமி பைனல் செல்ல வேண்டும் என்பதற்காக ஐசிசி பாடுபடுகிறது என்றும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் சாகித் அப்ரிடி. அவர் கூறுகையில்,
“வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விதிமுறைகளை மீறி நடந்து கொண்டார். இதனை நடுவர் அப்போது பார்க்கவில்லை என்றாலும் பின்னர் அதைப்பற்றி தெரிந்து கொண்டார். ஆனால் ஏன் ஐந்து ரன்கள் அபராதமாக வங்கதேசத்திற்கு கொடுக்கவில்லை.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் நடுவர்கள் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டனர். அது நோ-பால் இல்லை என்று பலருக்கும் தெரியும். நடுவர் எதற்காக இந்தியாவிற்கு சாதகமாக கொடுத்தார்?.
ஐசிசி விதிமுறைகள் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தேவைக்கேற்றவாறு மாற்றப்பட்டு வருகிறது. பிசிசிஐ கிரிக்கெட் வாரியம் பணத்தோடு விளையாடுகிறது.” என்று அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.