பெரிய தப்பு பண்ணிட்டாங்க…விராட் கோலி கேப்டனா இருந்திருந்தா இப்ப இந்தியா தான் கெத்தான டீம்… முன்னாள் வீரர் சொல்கிறார்
விராட் கோலியே கேப்டன் பதவியில் நீடித்திருந்தால் இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கான 100 சதவீதம் தற்போதே தயாராகியிருக்கும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான ரசீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.
விண்டீஸ் அணியுடனான கிரிக்கெட் தொடரை நிறைவு செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக அயர்லாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரையும், அதன்பின் ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க உள்ளது.
ஆகஸ்ட் 30ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டமர் 17ம் தேதி நிறைவடைய உள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
செப்டம்பர் 3ம் தேதி நடைபெற இருக்கும் இந்த போட்டி மீது வழக்கம் போல் அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர் என்றால் அது மிகையல்ல.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பெரிய குழப்பமே நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் தங்களது தற்காலிக அணிகளையே அறிவித்துவிட்டு முழு தயாராக இருக்கும் நிலையில், இந்திய அணியோ டீமில் யார் யாருக்கு இடம் கொடுக்கலாம் என்பதையே தீர்மானிக்க முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியின் தேவையற்ற முயற்சிகளும், தேவையற்ற மாற்றங்களும் தான் காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரரான ரசீத் லத்தீப், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு 100 சதவீதம் தயாரான வலுவான அணியாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரசீத் லத்தீப் பேசுகையில், “இந்திய நிர்வாகம் பல வீரர்களை வைத்து தேவையற்ற பரிசோதனைகளை நடத்தி வருகிறது. புதிய வீரர்களை நிலை நிறுத்த அனுமதிக்காததால் தேர்வு முறையில் திணறி வருகிறது. அதனால் தான் சமீபத்தில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்தது. உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது. கேப்டன்களின் மாற்றம் இந்திய அணிக்கு உதவவில்லை என்பது சந்தேகம் இல்லை. வீராட்கோலியை கேப்டனாக நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்தியா உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருக்கும்” என்று தெரிவித்தார்.