லாக்டவுனுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் இப்படிதான் நடக்கும்.. பிரபல வேகப்பந்துவீச்சாளர் லீக் செய்த தகவல்!
கொரோனா வைரஸ் காரணமாக நிகழ்வில் இருக்கும் லாக்டவுனுக்கு பிறகு கிரிக்கெட் போட்டி இப்படிதான் நடக்க திட்டமிடப்பட்டு வருவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஒட்டுமொத்த விளையாட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக வீரர்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்தியாவில் மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வரும் ஜூலை 1 வரை அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த லாக்டவுன் காலம் முடிவுற்ற பிறகு கிரிக்கெட் போட்டிகள் இவ்வாறுதான் நடத்த திட்டமிட்டு வருவதாக சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார். மேலும் வீரர்களின் உடல்தகுதியை கட்டுக்குள் வைப்பது குறித்தும் பேசியுள்ளார்.
“நீண்ட நாட்களாக வீட்டில் இருப்பது வீரர்களுக்கு விசித்திரமானது. ஊரடங்கு நீட்டிப்பு அவர்கள் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு அதிக நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. விளையாட்டு துறை, எந்த ‘ரிஸ்க்’கும் எடுக்காது என்பது மட்டும் நிச்சயம்.

அரசு பாதுகாப்பாக கருதினால் மட்டுமே நாங்கள் மீண்டும் போட்டியில் பங்கேற்போம். ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. மைதானத்திலேயே வீரர்கள் தங்குவதற்கு ஓட்டல் வசதி செய்வது குறித்து கிரிக்கெட் வாரியத்தில் பேசப்படுகிறது. இதனால் வீரர்கள் வெளியில் செல்ல தேவையில்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில் வீரர்கள் அனைவரும் உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் போட்டி எப்போது துவங்கினாலும் விளையாடலாம். உடற்தகுதிக்காக போட்டியில் பங்கேற்பது தாமதமாகிவிடக் கூடாது”