3 வருஷம் செஞ்சுரி அடிக்காமல், மீண்டும் செஞ்சுரி அடிக்க முடிகிறது என்றால் அதற்கு விராட் கோலி இடம் இருக்கும் ஒரே விஷயம் தான் காரணம் என்று பேட்டியில் கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதியும் பெற்றது.
அகமதாபாத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணிக்கு விராட் கோலி விளையாடிய விதம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. சுமார் 1200 நாட்களுக்குப் பிறகு டெஸ்டில் சதம் அடித்திருக்கிறார். 15 பவுண்டர்கள் உட்பட 186 ரன்களை அடித்தார்.
மிகவும் நிதானமாக விளையாடிய இவர் எந்தவித தவறும் செய்யாமல் கடைசிவரை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தார். வேறு எவராக இருந்தாலும் எப்போதோ மனம்தளரி இருப்பார்கள். விராட் கோலியின் மனவலிமை மற்றும் உடல் வலிமை இரண்டும் மிகச் சிறப்பாக இருந்தது. அதன் காரணமாகவே இத்தனை வருடங்கள் கழித்தும் அவரால் டெஸ்டில் சதம் அடிக்க முடிந்திருக்கிறது என்று பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் விராட் கோலி இத்தனை வருடங்கள் கழித்தும் சதம் அடித்திருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்று கருத்து தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
“இப்போதும் அதே மனவலிமையுடன் அவர் விளையாடுவதற்கு மிக முக்கிய காரணம் அவரிடம் இருக்கும் ஒழுக்கம் தான். உடல் பயிற்சி மற்றும் கிரிக்கெட் பயிற்சி என்று அனைவருமே பல பயிற்சிகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிரிக்கெட்டை பொருத்தவரை ஒழுக்கம் முக்கியமானதாக இருக்கவேண்டும். ஆகையால் தான் விராட் கோலி இந்த உயரத்தில் இருக்கிறார்.
கடந்த காலங்களில் அவர் எவ்வளவு பெரிய உணவுப் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவை அனைத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு கிரிக்கெட்டுக்காக நாள் முழுவதும் சிறந்த உடற்பயிற்சி, சிறந்த உணவு மற்றும் சிறந்த கிரிக்கெட் சார்ந்த பயிற்சிகள் என்று அனைத்தையும் மேற்கொள்கிறார். அதை நாள் தவறாமல் செய்கிறார்.
மேலும் இத்தனை வருடங்கள் ரன்கள் வரவில்லை என்றாலும் மனம் தளராமல் இருந்திருக்கிறார். விட்டுக் கொடுக்காமலும் இருந்திருக்கிறார். அத்துடன் அதே உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் மனதிடமை என அனைத்தையும் தொடர்ச்சியாக செய்திருக்கிறார். இதன் பலனாகவே மீண்டும் அவரால் செஞ்சுரி அடிக்க முடிகிறது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இவ்வளவு பொறுமையாக நின்று விளையாட முடிகிறது.” என்றார்.