ஜடேஜாவிடம் 15 நிமிடங்கள் பேசியிருப்பேன், அதற்குள் பல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார். அடுத்த முறை இந்தியாவிற்கு வரும்பொழுது இதை பயன்படுத்தும் படியும் அவர் சொன்னதாக ஆஸ்திரேலியா சுழல் பந்துவீச்சாளர் மேட் குன்னமென் பேட்டியளித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் டிராபி இந்திய அணிக்கு சாதகமாக 2-1 என முடிந்து, தொடர்ந்து நான்காவது முறையாக இந்திய அணி இந்த டிராபியை கைப்பற்றியது. இந்த தொடர் சுழல்பந்துவீச்சாளர்களுக்கு முழுக்க முழுக்க சாதகமான தொடராகவே அமைந்தது.
இந்திய அணியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து 47 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆஸ்திரேலியா அணியில் லியோன் 22 விக்கெட்டுகள், டாட் மர்பி 14 விக்கெட்டுகள் மற்றும் மேட் குன்னமென் 9 விக்கெட்டுகள் என மூவரும் இணைந்து 45 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதில் டாட் மர்பி மற்றும் குன்னமென் இருவரும் இந்த டெஸ்ட் தொடரில் தான் டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுகமாகினர். டாட் மர்பி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். குன்னமென் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றி ஆஸ்திரேலியா அணியின் மூன்றாவது டெஸ்ட் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார்.
3வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு குன்னமென் பேசுகையில், “நான் ஜடேஜாவின் மிகப்பெரிய ரசிகன். அவரிடம் டிப்ஸ் கேட்டேன். ‘தொடர் முடிந்த பிறகு உனக்கு நானே கூறுகிறேன். சொல்வதற்கு நிறைய இருக்கின்றன.’ என்று ஜடேஜா சொன்னார்.” என குன்னமென் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தபின் இரு அணி வீரர்களும் தங்களது நண்பர்கள் மற்றும் முன்னணி வீரர்களுடன் பேசிக்கொண்டனர். அப்போது குன்னமென் ஜடேஜாவிடம் உரையாடினார். இருவருக்கும் இடையே அப்படி என்ன உரையாடல் நிகழ்ந்தது? ஜடேஜா தன்னிடம் என்ன கூறினார்? என்பதை தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் குன்னமென். அவர் கூறியதாவது:
“ஜடேஜாவிடம் ஒரு 15 நிமிடம் பேசியிருப்பேன். அதற்குள் அவர் நிறைய நுணுக்கங்களை கூறினார். இருவரும் நிறைய பேசினோம். இந்த சந்திப்பை நேதன் லயன் ஏற்படுத்திக் கொடுத்தார். ஜடேஜாவிற்கு ஆஸ்திரேலியா அணியின் சுழல்பந்துவீச்சாளர்கள் மீது நிறைய மதிப்பு இருந்தது. அவரது பேச்சிலேயே தெரிந்தது. மேலும், இந்த தொடரில் நான், மர்பி, லயன் மூவரும் செயல்பட்ட விதத்தைப் பார்த்து மிகவும் வியந்திருப்பதாக பேசினார். இத்தகைய வார்த்தைகளை அவரிடம் இருந்து கேட்பது மகிழ்ச்சியாக இருந்தது.
ஜடேஜாவிடம் பேசியபோது, அவர் கொடுத்த சில அறிவுரைகள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் பயன்படும் என நினைத்திருந்தேன். அடுத்தமுறை இந்திய துணைக்கண்டங்களின் மைதானங்களில் விளையாடும்போது நன்றாக பயன்படும் என்றும் வலியுறுத்தினார். ஜடேஜா இவ்வளவு பண்புமிக்க ஒருவர் என்று தெரிந்து கொண்டேன். அவர் மீது இருந்த மதிப்பு இன்னும் அதிகமாகியது.
இன்ஸ்டாகிராமில் எனக்கு மெசேஜ் அனுப்பினார். எந்த நேரத்திலும் என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு தொடர்பு கொண்டு நீ கேட்கலாம் எந்தவித தயக்கமும் வேண்டாம் என்றார். நான் மதிக்கும் வீரர் என்னிடம் இப்படி சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.” என்று குன்னமென் பேசினார்.