அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருக்கும் வயதாகிவிட்டது, அவர்கள் எதிர்காலம் என்ன? அடுத்த முறை இந்தியாவில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருப்பார்களா? என்று கேள்வி எழுப்பிய நிருபருக்கு தக்க பதிலை கொடுத்திருக்கிறார் ரோகித் சர்மா.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக தொடரை கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் ஆல்ரவுண்டர்கள்.
ஜடேஜா பேட்டிங்கில் 135 ரன்கள், பவுலிங்கில் 22 விக்கெட்டுகள் மற்றும் அஸ்வின் பேட்டிங்கில் 86 ரன்கள், பவுலிங்கில் 25 விக்கெட்டுகள் என்று கைப்பற்றினர். மற்றொரு ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும் பேட்டிங்கில் அபாரமாக விளையாடி மூன்று அரைசதங்கள் உட்பட 264 ரன்கள் அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர்கள் மூன்று பேரும் தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றினர்.
பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருக்கும் இணைந்து தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து 47 விக்கட்டுகளை கைப்பற்றி எதிரணிக்கு அச்சுறுத்தலாகவும் இருந்திருக்கின்றனர். இதில் ஜடேஜாவிற்கு 34 வயதாகிவிட்டது. அஸ்வினுக்கு 36 வயதாகி விட்டது. அடுத்த முறை இந்தியாவில் நடக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில், இவர்கள் அணியில் இருப்பார்களா? இவர்களுக்கு வயதாகிவிட்டதே எதிர்காலம் அணியில் எப்படி இருக்கும்? என்று பல கேள்விகளை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ரோகித் சர்மாவிடம் எழுப்பினர். அப்போது பதில் கூறிய அவர்:
“(சிரித்தபடியே) உண்மையில் அவர்கள் அணியில் இருப்பார்களா என்பது எனக்கு தெரியாது. நானும் இருப்பேனா என்பதும் எனக்கு தெரியாது. நான்கு வருடங்கள் இருக்கின்றன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்திய அணிக்கு அவர்கள் இருவரின் செயல்பாடு கண்டிப்பாக தேவை. அணியில் இருக்க வேண்டும். இந்த வயதிலும் நீண்ட பார்ட்னர்ஷிப்பை எப்படி உடைத்தார்கள் என்று பார்க்க முடிந்தது. பேட்டிங்கில் முக்கியமான கட்டத்தில் ரன்களை அடித்துக் கொடுத்ததையும் நம்மால் பார்க்க முடிந்தது. தொடர் நாயகன் விருதையும் பெற்றிருக்கிறார்கள். எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்வோம்.”
“குறிப்பாக, இந்திய கண்டிசன்களில் அவர்களுக்கு மிஞ்சிய வீரர்கள் வேறு எவரும் இல்லை என்று கூறலாம். இத்தனை வருடம் இந்திய அணி வெற்றிகரமாக இருப்பதற்கு இந்த இருவரின் பங்களிப்பு இன்றியமையாதது. ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல நீண்ட காலமாக இந்திய அணிக்கு அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் இல்லாத இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். இன்னும் சில ஆண்டுகள் அவர்கள் அணியில் நீடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.” என்றார்.