தற்போது விராட் கோலிக்கு நடந்துவரும் அனைத்தும் நான் பேட்டிங் செய்த காலங்களில் சச்சின் டெண்டுல்கருக்கும் நடந்திருக்கிறது என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இருப்பினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-1 என்ற கணத்தில் வென்று தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி கைப்பற்றியது.
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு நடந்த மிகப்பெரிய நம்பிக்கையான ஒரு செயல் என்னவென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 1200க்கும் மேற்பட்ட நாட்களுக்குப் பிறகு விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதத்தை அடித்திருக்கிறார். இவர் அடிக்கும் 28வது டெஸ்ட் சதம் அதுவாகும். மேலும் ஒட்டுமொத்தமாக 75வது சதமாகும். இறுதியில் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
4வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையே நீண்ட உரையாடல் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களை விராட் கோலி பகிர்ந்து கொண்டார். அப்போது விராட் கோலி நீண்டகாலமாக சதம் அடிக்காமல் இருந்தபோது சந்தித்த அத்துனை விமர்சனங்களையும் தன்னுடைய காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் சந்தித்திருக்கிறார் என்று ராகுல் டிராவிட் பகிர்ந்து கொண்டார். ராகுல் டிராவிட் பேசியதாவது:
“இந்தியாவில் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக உயர்ந்தால், ரசிகர்கள் அவர்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை முன்வைத்திருப்பார். நான் பேட்டிங் செய்த காலங்களில், சச்சின் உடன் பேட்டிங் செய்துவந்தபோது இது போன்ற நிகழ்வுகளை கண்டிருக்கிறேன்.” என்றார் ராகுல் டிராவிட்.
“சச்சின் ஒவ்வொரு போட்டியிலும் நிறைய ரன்களை அடிக்க வேண்டும், சதம் அடிக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுவார்கள். எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மைதானம் எப்படிப்பட்டது? ஏன் சில போட்டிகளில் ரன்கள் அடிக்க முடியாமல் போனது? என்பதை உணரமாட்டார்கள்.”
“கடந்த போட்டிகளில் சச்சின் அத்தகைய உயரமான எதிர்பார்ப்பை நிகழ்த்திக்காட்டி இருப்பார். அதுபோலத்தான் தற்போது விராட் கோலிக்கு நடந்து வருவதும். விராட் கோலி கடந்த காலங்களில் தனது பேட்டிங் தரத்தை காட்டியிருக்கிறார்.” என்று ராகுல் டிராவிட் பகிர்ந்துகொண்டார்.