யார் இல்லைன்னாலும் பரவாயில்ல, எங்களால இந்திய அணியை ஈசியா சமாளிக்க முடியும்; ஆஸ்திரேலிய வீரர் ஆருடம்..
எந்த காரணமும் எங்களை பலவீனமான அணியாக மாற்றி விட முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் பீட்டர் ஹன்ட்ஸ்கோம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதற்கட்டமாக நடைபெற்று வரும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. நாக்பூர் மற்றும் டெல்லி மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத் மற்றும் இந்தூர் மைதானங்களில் நடைபெறுகிறது. வருகிற மார்ச் 1ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்குகிறது.
3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி தோல்வியுறும் பட்சத்தில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தையும் உறுதி செய்யும். இதனால் வெற்றி பெறுவதற்கு முனைப்புடன் இந்திய அணி பயிற்சி செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கிறது.
ஆனால் ஆஸ்திரேலியா அணியில் அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் டேவிட் வார்னர் போன்றவர்கள் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை என்பதால் நிச்சயமாக ஆஸ்திரேலியா அணி 4-0 என தோல்வியை தழுவும் என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அணியில் சீனியர் வீரர்கள் பலர் இல்லாததன் காரணமாக ஆஸ்திரேலியா அணி தடுமாறி வருகிறது என்றும், தற்பொழுது பேட் கம்மின்ஸ் மற்றும் டேவிட் வார்னர் போன்ற வீரர்களும் இல்லை என்பதால் நிச்சயம் இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகவே இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், ஆஸ்திரேலியா அணியில் யார் இல்லை என்றாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான அனைத்து திட்டம் உள்ளது என்று ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் பீட்டர் ஹன்ட்ஸ்கோம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் வாயிலாக விமர்சிப்பவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஹன்ட்ஸ்கோம்ப் பேசுகையில், “அவர்கள் இருவரும் உலக தலைசிறந்த வீரர்கள், பேட் கமின்ஸ் எங்களுடைய கேப்டன், அவர்கள் அணியில் இடம் பெறாமல் போனது நிச்சயம் எங்களுக்கு கடினமாக உள்ளது, நிச்சயம் அவர்கள் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பாகும். ஆனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்து தகவலும் எங்களிடம் உள்ளது மேலும் பயிற்சியும் அனைத்து பெசிலிட்டிகளும் எங்களிடம் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் காயத்திலிருந்து குணமாகி விளையாடவுள்ளார். அதேபோன்று அதிரடி ஆல்ட்ரவுண்டர் கேமரூன் கிரீன்னும் காயத்திலிருந்து அணிக்கு திரும்பியுள்ளார். எங்களது அணியில் தற்போது இரண்டு மிகப்பெரிய வீரர்கள் உள்ளனர். அதனால் இந்திய அணியை எங்களால் சமாளிக்க முடியும்” என்று பீட்டர் ஹன்ஸ்கோம் தெரிவித்திருந்தார்.
மேலும் பேட் கம்மின்ஸ்க்கு பதில் அணியை வழிநடத்த போகும் ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய வேலையை மிகச் சிறப்பாக செய்வார் என்றும் பீட்டர் ஹன்ஸ்கோம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.