சூர்யகுமார் யாதவை இஷான் கிஷன், ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல என முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டி.20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
என்னதான் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியிருந்தாலும், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நிலவி வரும் பிரச்சனை மட்டும் இன்னும் சரியாகவில்லை. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் ஒரு போட்டியில் ஓரளவிற்கு விளையாடினாலும், அடுத்த போட்டியில் சொதப்பி விடுகின்றனர். அடுத்த டி.20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியில் நிலவி வரும் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்யப்பட வேண்டும் என்பதால் இந்திய நிர்வாகமும் பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இருந்த போதிலும் இந்திய அணியின் மாற்றங்கள் எதுவும் இதுவரை பெரிதாக கை கொடுக்கவில்லை. இதனால் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான சல்மான் பட், சூர்யகுமார் யாதவிடம் இருந்து அதிரடி ஆட்டத்தை எதிர்பார்ப்பதே தவறு என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சல்மான் பட் பேசுகையில், “சூர்யகுமார் யாதவ் நிறைய உள்நாட்டு போட்டிகளில் ஆடியுள்ளார். அவரது வயது 30க்கு மேல். இந்த வயதில் ஒரு பேட்ஸ்மேன் நன்றாக பக்குவப்பட்டிருப்பார். எனவே அதிக அனுபவம் கொண்ட சூர்யகுமார் யாதவை, அனுபவம் குறைவான இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட்டுடன் ஒப்பிடக்கூடாது. அதனால் சூர்யகுமார் யாதவ் நிலைத்தன்மையுடன் ஆடவேண்டும்” என்று சல்மான்பட் தெரிவித்துள்ளார்.