டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்றதும் புதிய சாதனை படைத்திருக்கிறார் துவக்க வீரர் கே எல் ராகுல்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் விராட் கோலி முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை. ஆகையால் இரண்டாவது டெஸ்டிற்கு கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இவர் கேப்டன் பொறுப்பை ஏற்பது இதுவே முதல்முறை ஆகும். டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்றதன் மூலம் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஒரு சில வீரர்களில் கேஎல் ராகுலும் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக, சுனில் கவாஸ்கர், முகமது அசாருதீன், அஜித் வடேகர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளனர். தற்போது இந்தப் பட்டியலில் கேஎல் ராகுல் இணைந்திருக்கிறார்.
மேலும் தென்ஆப்ரிக்க சுற்றுப் பயணத்தில், முதல்முறையாக ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்க இருந்த ரோகித் சர்மா, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். ஆகையால் ஒருநாள் போட்டிகளுக்கும் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 266 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இந்திய அணி 239 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டீன் எல்கர் மிகச் சிறப்பாக துவக்கம் அமைத்துக் கொடுத்தார். மூன்றாம் நாள் முடிவில் எல்கர் 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவருடன் வண்டர் டாசன் 11 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 3ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் எனும் முனைப்பில் நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. நான்காம் நாள் ஆட்டம், தொடர்ச்சியான மழை காரணமாக துவங்குவதற்கு தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம் 1 – 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதுவரை ஏழு முறை தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒரு முறை மட்டுமே டிரா செய்திருக்கிறது. ஆறுமுறை தோல்வியுற்று இருக்கிறது. ஒரு முறை கூட தொடரை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.