கேப்டன் பொறுப்பேற்ற பிறகும் கேஎல் ராகுல் தனது பேட்டிங்கில் சமரசம் செய்துகொள்ளாமல் விளையாடுகிறார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான்.
தென் ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னர் கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். ரோகித் சர்மாவிற்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது கே எல் ராகுலுக்கு அந்த துணை கேப்டன் பதவி மாற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் விளாசிய கேஎல் ராகுல், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தார். 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலி விளையாடவில்லை. இதனால் 2வது டெஸ்டில், துணை கேப்டனாக இருந்த ராகுலுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளோம் என்ற எந்தவித தயக்கமும் இல்லாமல், தனது பேட்டிங்கில் சமரசமும் செய்துகொள்ளாமல், மிகச் சிறப்பாக விளையாடி முக்கியமான கட்டத்தில் அரை சதம் அடித்தார்.
முதல் இன்னிங்சில் குறைந்த ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டப்பட்டிருக்கும். ஆனால் ராகுலின் அரைசதம் காரணமாக முதல் இன்னிங்சில் இந்திய அணி 200 ரன்களை கடக்க முடிந்தது. பந்துவீச்சிலும் இந்திய அணியை நன்றாக வழிநடத்தினார். 229 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணியை சுருட்டவும் முடிந்தது.
இந்நிலையில் கேப்டன் பொறுப்பு ஏற்றபிறகு, தனது பேட்டியில் நிதானமாக விளையாடி ரன்களை அடிக்கிறார் என கேஎல் ராகுலுக்கு புகழாரம் சூட்டினார் இர்பான் பதான்.
“கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, ஐபிஎல் தொடரிலும், தற்போது இந்திய அணியிலும் அவரது பேட்டிங்கில் எந்தவிதக் குறையும் சொல்ல முடியாத அளவிற்கு விளையாடுகிறார். சிலர் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு தனது பேட்டிங்கை சமரசம் செய்து கொள்வர். ஆனால் கேஎல் ராகுல் அப்படி எதுவும் செய்யாமல், தொடர்ந்து முன்னர் இருந்தது போலவே இப்போதும் பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
கிரிக்கெட் உலகிலுள்ள அனைவருக்கும் தெரியும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து மைதானங்கள் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருக்கும் என்று. இந்த மைதானங்களில் நிதானமும், நல்ல மனநிலையும் தேவைப்படும். அதனை சரியாகப் புரிந்துகொண்ட கேஎல் ராகுல், இதுவரை இல்லாத அளவிற்கு நிதானத்தை கடைபிடித்து விளையாடி வருகிறார். குறிப்பாக இவ்விரு நாட்டின் மைதானங்களிலும் துவக்க வீரர்கள் புதிய பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினம். கேஎல் ராகுல் இதனை சிறப்பாக விளையாடுவது மிகுந்த ஆச்சரியத்தையும், அவரது பேட்டிங் நுட்பத்தையும் காட்டுகிறது. கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு இவர் சரியான வீரர் தான் என்றும் தெரிகிறது.” என புகழாரம் சூட்டினார்.