சஞ்சு சாம்சன் சதம்: இலங்கை – இந்திய பிரசிடென்ட் லெவன் பயிற்சி ஆட்டம் டிரா

சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க இலங்கை – இந்திய பிரசிடென்ட் லெவன் இடையிலான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 16-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இலங்கை அணி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட தீர்மானித்தது.

இந்திய பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான இந்த பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் யுனிவர்சிட்டி கேம்பஸில் உள்ள மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய பிரசிடென்ட் லெவன் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் சமரவிக்ரமா, கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.  சமரவிக்ரமா 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கருணாரத்னே 50 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு  ஹர்ட் மூலம் வெளியேறினார்.

அடுத்து வந்த திரிமன்னே 17 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மேத்யூஸ் 54 ரன்னும், டிக்வெல்லா அவுட்டாகாமல் 73 ரன்களும் எடுத்தனர். பெரேரா 44 பந்தில் 48 ரன்களும், சில்வா 36 ரன்களும் சேர்க்க இலங்கை அணி முதல் நாளில் 88 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது,

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல்நாளில் எடுத்த 411 ரன்களோடு இலங்கை அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதன்படி இந்திய பிரசிடென்ட் லெவன் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அகர்வால், ஜிவன்ஜோத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அகர்வால் 16 ரன்கள் எடுத்த நிலையிலும், ஜிவன்ஜோத் சிங் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த பண்டாரி 3 ரன்னில் வெளியேறினார்.

4-வது வீரராக கேப்டன் சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்த சாம்சன் 128 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த பிரேம் 39 ரன்கள் சேர்த்தார். சந்தீப் (39), சக்சேனா (20) தாக்குப்பிடித்து விளையாட இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 75 ஓவரில் 287 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

சமீப காலமாக டி20 போட்டிகளில் தோனி செயல்படுவதில்லை, இந்நிலையில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி வருகிறார். நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோனி பொறுமையாக விளையாடியதால், அவரை பற்றி லட்சுமண், அகர்கர் ஆகியோர் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். அனைவரும் இந்த டி20 போட்டியில் இருந்து தோனியை ஓய்வு பெறுமாறு கேட்டு வருகிறார்கள்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.