இனி பயப்படவே தேவை இல்ல… யார் நினைச்சாலும் உன்ன டீம்ல இருந்து எடுக்க முடியாது; இந்திய அணியின் நட்சத்திர வீரர் குறித்து பேசிய புஜாரா
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மிக சிறப்பாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவை இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 29ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.
லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை, இங்கிலாந்து அணி 229 ரன்களில் கட்டுப்படுத்தியது. பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 229 ரன்களில் கட்டுப்படுத்திய இங்கிலாந்து அணி, பேட்டிங்கில் அதற்கு நேர் மாறாக செயல்பட்டது.
பும்ராஹ் மற்றும் முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டையும் இழந்து வெளியேறியதால் வெறும் 129 ரன்களுக்கே ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இங்கிலாந்து அணியுடனான இந்திய அணியின் இந்த மிரட்டல் வெற்றிக்கு முகமது ஷமி, பும்ராஹ், ரோஹித் சர்மா ஆகியோரை போன்றே சூர்யகுமார் யாதவும் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தபின்பு ஒட்டுமொத்த அழுத்தத்தையும் தன் மீது சுமத்தி கொண்ட சூர்யகுமார் யாதவ், கடைசி வரை பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி 49 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி பேசி வரும் நிலையில், இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாராவும், சூர்யகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து புஜாரா பேசுகையில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்த இக்கட்டான நிலையில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களத்திற்குள் வந்தார். 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு ரோஹித் சர்மாவிற்கு ஒத்துழைப்பும் கொடுத்து விளையாடினார். ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தபிறகும் சூர்யகுமார் யாதவ் விளையாடிய விதம் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்திய அணியின் வெற்றியில் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பும் முக்கியமானது. தனது பேட்டிங்கில் இருந்த குறைகளை சூர்யகுமார் யாதவ் சரி செய்து வருகிறார் என்று கருதுகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் விரைவாக விக்கெட்டை இழந்திருந்தால் இந்திய அணி 200 ரன்களை கூட எட்டியிருக்காது 190 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியிருக்கும். ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டாலும் இந்திய அணி சூர்யகுமார் யாதவை ஆடும் லெவனில் இருந்து நீக்காது என்றே நம்புகிறேன். சரியான வாய்ப்பு கிடைத்தால் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் சிறந்த பினிசராக மாறுவார் என முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.