இவர பார்த்தாலே பேட்ஸ்மேன் எல்லாம் நடுங்குறாங்க… இந்திய வீரரை புகழ்ந்து பேசிய அணில் கும்ப்ளே
விண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவிச்சந்திர அஸ்வினை, முன்னாள் இந்திய வீரரான அணில் கும்ப்ளே வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 20ம் தேதி துவங்க உள்ளது.
இந்தநிலையில், இந்தியா – விண்டீஸ் இடையேயான நடப்பு டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான அணில் கும்ப்ளே, விண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் என மொத்தம் 12 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்த ரவிச்சந்திர அஸ்வினை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து அணில் கும்ப்ளே பேசுகையில், “ரவிச்சந்திர அஸ்வின் எதிரணி பேட்ஸ்மேன்களின் கவனத்தை கலைப்பதில் வல்லவர். அவர்களது எண்ணத்துடன் ரவிச்சந்திர அஸ்வின் விளையாடுவார். இது ரவிச்சந்திர அஸ்வினின் தனித்துவமான திறமை. ரவிச்சந்திர அஸ்வினின் பந்துவீச்சை சமாளிப்பது எப்படிப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் சவாலானதாகவே இருக்கும். விண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அவரது பந்துவீச்சு தந்திரம் நிறைந்ததாகவே இருந்தது. பேட்ஸ்மேனுக்கு ஏற்றவாறு அவர் பந்துவீசிய விதம் பார்ப்பதற்கே அழகாக இருந்தது” என்று தெரிவித்தார்.
இதுவரை மொத்தம் 709 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள ரவிச்சந்திர அஸ்வின், இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள வீரர்கள் பட்டியல், அணில் கும்ப்ளேவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். அணில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.