ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாட தோனி கொடுத்த ஆலோசனைகள் உதவியாக இருந்ததாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும், மிகப்பெரும் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, கடைசி ஒருநாள் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா தான் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

முதல் 45 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 226 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா கடைசி ஐந்து ஓவரில் 76 ரன்கள் குவித்தனர். இதுவே இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடுவது புதிதல்ல என்பதால், ஹர்திக் பாண்டியாவை ஜடேஜாவின் ஆட்டம் பெரும்பாலான முன்னாள் வீரர்களை கவர்ந்துள்ளது. ஜடேஜாவை கடுமையாக விமர்சித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்றவர்களே தற்போது ஜடேஜாவை பாராட்டி பேசி வருகின்றனர்.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டி குறித்து பேசிய ஜடேஜா, தோனி கொடுத்த சில டிப்ஸ்களே தனது பொறுப்பான ஆட்டத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜடேஜா பேசுகையில், “தோனி பாய் (அண்ணன்) இந்தியாவுக்காகவும், சென்னை அணிக்காகவும் நிறையை ரன்களை சேர்த்துள்ளார். அவர் கிரீஸுக்கு வந்தால் பேட்ஸ்மேன்களுடன் பார்ட்னர்ஷிப் அமைக்கவும், செட்டாகவும் முயற்சி செய்வார். அது தான் அவருடைய பேட்டர்ன். அதன் மூலம் பெரிய ஷாட்களை கூலாக ஆடி அசத்துவார்.

அப்படி அவர் பலமுறை விளையாடியதை அவருக்கு பக்கத்தில் இருந்து பேட்ஸ்மேனாக பார்த்தும், அது மாதிரியான சூழலில் அவருடன் விளையாடியும் உள்ளேன். அது போல விளையாடும் போது நிறைய ரன்களை சேர்க்க கடைசி 4 – 5 ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றாலே போதும் என சொல்வார். அதை தான் ஹர்திக் உடனான பார்ட்னர்ஷிப்பில் நான் செய்தேன். இறுதி வரை விளையாடி கடைசி சில ஓவர்களில் ஆன் சைடில் ரன்களை சேர்ப்பது தான் எங்கள் திட்டம். அதை சரியாக செய்தோம்” என்கிறார் ஜடேஜா.