தோல்விக்கு இது தான் காரணம்; ஷிகர் தவான் ஓபன் டாக்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் 259 ரன்கள் என்ற கடின இலக்கை எளிதாக எட்டி ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 193 ரன்களை குவித்தனர். 32 ஓவர்களிலேயே 200 ரன்களை எட்டிவிட்டது இந்திய அணி. ஆனால் அதன்பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணியால் இமாலய இலக்கை எட்டமுடியவில்லை. ரோஹித்தும் தவானும் அமைத்து கொடுத்த அடித்தளத்திற்கு, 400 ரன்களை எட்டியிருக்கலாம் அல்லது 400 ரன்களை நெருங்கியிருக்கலாம். ஆனால் கோலி, ராகுல், கேதர் ஆகியோர் சொதப்பினர். ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஓரளவிற்கு ஆடி ரன்களை சேர்த்தனர். எனினும் 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்தது இந்திய அணி.
359 ரன்கள் என்ற கடின இலக்கை, கவாஜா, ஹேண்ட்ஸ்கம்ப், டர்னர் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் 48வது ஓவரிலேயே எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. கவாஜாவும் ஹேண்ட்ஸ்கம்ப்பும் பார்ட்னர்ஷிப் அமைத்து மூன்றாவது விக்கெட்டுக்கு 192 ரன்களை சேர்த்து கொடுத்தனர். பின்னர் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 48வது ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார் ஆஷ்டன் டர்னர்.
போட்டிக்கு பின்னர் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய தவான், கடந்த போட்டி மற்றும் இந்த போட்டி, இரண்டு போட்டிகளிலுமே கண்டிஷனை கணிக்க தவறிவிட்டோம். ராஞ்சியில் பனி அதிகமாக இருக்கும் என நினைத்து இரண்டாவது பேட்டிங் செய்தோம். ஆனால் அங்கு பனி இல்லவே இல்லை. இங்கு(மொஹாலியில்) பனி இருக்காது என்று நினைத்தோம். ஆனால் மிக மிக அதிகமாக இருந்தது. கண்டிஷனை கணிக்க தவறியதுதான் எங்கள் தோல்விக்கு காரணம். பனி அதிகமாக இருந்ததால் கிரிப்பிங் கிடைக்கவில்லை. அதை பயன்படுத்தி ஆஷ்டன் டர்னர் அருமையாக ஆடினார். இதே பனி இல்லாமல் இருந்திருந்தால் அவரால் அபாரமான ஷாட்டுகளை ஆடியிருக்க முடியாது என்று தவான் தெரிவித்தார்.