இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஏப்ரலில் நடைபெறவுள்ளது.
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் திட்டத்தின் கீழாக இந்தத் தொடர் நடைபெறுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் 2018 ஏப்ரல் 8-ஆம் தேதியும், 2-ஆவது ஆட்டம் 11-ஆம் தேதியும், 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் 14-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில், அதில் இங்கிலாந்து வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்த இரு அணிகளும் மீண்டும் சந்திக்கின்றன.
இந்த ஒருநாள் தொடரானது, இந்தியா-இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ளது.
அதற்கு முன்பாக, மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆரம்பத் தொடரில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா. இந்தத் தொடர் பிப்ரவரி 5 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய மகளிர் அணி எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.