நான் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது; மோடிகிட்ட பேசிக்கங்க; எஸ்கேப் ஆகும் கங்குலி
இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என பி.சி.சி.ஐ.,யின் புதிய தலைவரான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்புக்கு வேறு யாரும் போட்டியிடாததால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இருப்பினும், வரும் 23 ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. அப்போது கங்குலி தலைவர் பதவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்பது இந்திய கிரிக்கெட் அணியை வலுவான நிலைக்கு அழைத்துச்செல்லும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அனுபவமிக்க கிரிக்கெட் வீரரான கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்பில் இருந்துகொண்டு இந்திய அணியை சரியாக வழிநடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கங்குலியிடம், ”நீங்கள் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றபின் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பிரச்னை தீர்க்கப்பட்டு, கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுமா” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கங்குலி, ”கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான இந்திய அணியின் வெளிநாட்டு பயணங்கள் அரசுடன் தொடர்புடையவை. நாங்கள் மட்டுமே முடிவு எடுக்க முடியாது. இது தொடர்பாக நீங்கள் இந்திய பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.