ஒலிம்பிக்கின் இந்திய தூதராகிறார் சவுரவ் கங்குலி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் சார்பில் நல்லெண்ணெத் தூதராக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இருக்கக் கோரி, இந்திய ஒலிம்பிக் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடக்கிறது
இது தொடர்பாக சவுரவ் கங்குலிக்குக் கடிதம் எழுதி, இந்தத் தூதர் பதவியை ஏற்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அந்தக் கடிதம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா எழுதிய கடிதத்தில், ” 2020-ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் சார்பில் நல்லெண்ணத் தூதராக நீங்கள் இருக்க வேண்டும் என்று உங்களைக் கவுரவிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் விரும்புகிறது. இந்திய அணிக்கு உங்களின் மேலான ஆதரவை வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி எப்போதும் இல்லாத முக்கியத்துவம் பெற்றது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்று 100 ஆண்டுகள் ஆகின்றன. கங்குலியின் ஆதரவும், ஊக்கமும், இந்தியத் தடகள வீரர்கள், வீராங்கனைகளுக்கும், இளைஞர்களுக்கும் புதிய உற்சாகமாக அமையும். கோடிக்கணக்கான மக்களின் ஆதர்ஷ நாயகனாக நீங்கள் இருக்கிறீர்கள்.
குறிப்பாக இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்கிறீர்கள். ஒரு சிறந்த நிர்வாகியாக, இளைஞர்களுக்கு எப்போதும் ஊக்கமளித்து வளர உதவுவீர்கள். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் உங்கள் துணையுடன் இளம் தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.