ஐ.பி.எல் தொடரில் கால் பதித்த முதல் அமெரிக்க வீரர்; முக்கிய அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விலகிய ஹாரி கர்னிக்கு பதிலாக அமெரிக்காவை சேர்ந்த அலி கானை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவோடு இதுவரை 12 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடரானது இந்த மாதம் 19ம் தேதி துவங்க உள்ளது.

கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாததன் காரணமாக துபாயில் வைத்து ஐ.பி.எல் தொடரை நடத்த பி.சி.சி.ஐ., திட்டமிட்டு அதன்படி அதற்கான அட்டவணையையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.
இந்நிலையில், இந்த சீசனில் கேகேஆர் அணியிலிருந்து இங்கிலாந்தை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் ஹாரி கர்னி விடாலிடி பிளாஸ்ட் தொடரில் காயமடைந்ததால் இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார்.
எனவே அவருக்கு பதிலாக அமெரிக்க கிரிக்கெட் அணியின் 29 வயது ஃபாஸ்ட் பவுலரான அலி கானை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அலி கான் 17 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக்கில் 2016ம் ஆண்டு கயானா அமேசான் வாரியர்ஸ் அணியிலும், அதன்பின்னர் 2018லிருந்து இதுவரை டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியிலும் ஆடிவருகிறார். அண்மையில் நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் டைட்டிலை வென்றது. அந்த அணியில் அலி கான் முக்கிய பங்கு வகித்தார். 140 கிமீ வேகத்தில் வீசக்கூடிய அலி கானை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. வேகப்பந்து வீச்சாளரான அலி கான் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டை பலப்படுத்துவார் என நம்பப்படுகிறது.
ஐ.பி.எல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்க வீரரும் அலி கான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.