பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டூபிளசிஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. கடந்த வருட தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 15வது சீசன் இந்த மாதம் 26ம் தேதி துவங்கி, மே மாதம் வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் கூடுதலாக இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போல் இந்த தொடருக்கான மெகா ஏலமும் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து கொண்டு, ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளிட்ட அணிகள் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் நிலையில், பெங்களூர் அணியோ இதுவரை தனது கேப்டன் யார் என்பதை அறிவிக்கவில்லை.
கடந்த தொடர்களில் பெங்களூர் அணியை வழிநடத்தி வந்த விராட் கோலி, திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் அடுத்த தொடருக்கான கேப்டனை தேர்வு செய்வதில் பெங்களூர் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. தினேஷ் கார்த்திக் போன்ற சில சீனியர் வீரர்கள் பெங்களூர் அணியில் இருந்தாலும், பெங்களூர் நிர்வாகமோ சரியான கேப்டனை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது.
இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி, பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டூபிளசிஸ் நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
மெகா ஏலத்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கடுமையாக போராடி டூபிளசிஸியை 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் பெங்களூர் அணி, தற்போது அவரையே கேப்டனாக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
𝗥𝗖𝗕 𝗨𝗡𝗕𝗢𝗫
1️⃣2️⃣th March 2️⃣0️⃣2️⃣2️⃣ #ForOur12thManWatch this space for more. 😎#PlayBold #UnboxTheBold #WeAreChallengers pic.twitter.com/nXjycELqgc
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 7, 2022
டூபிளசிஸிஸ் ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் கொண்டவராக இருப்பதோடு, கடந்த காலங்களில் தென் ஆப்ரிக்கா அணியையும் மிக சிறப்பாக வழிநடத்தியுள்ளதால் அவரை கேப்டனாக்குவது பெங்களூர் அணிக்கும் பயனளிக்கும் என தெரிகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ செய்தி 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.