விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரு நட்சத்திர வீரர்களிடத்திலிருந்தும் நிறைய கற்க விரும்புகிறேன் என்று இளம் வீரர் யாஷ் தூல் தெரிவித்துள்ளார்.
சமீபமாக நடந்து முடிந்த 19 வயதிற்குட்பட்ட உலக கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை வெற்றி பெற்றுக் கொடுத்த இளம் வீரர் யாஷ்துல் 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 50 லட்ச ரூபாய் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் u-19 உலகக் கோப்பை முடிந்தவுடன் நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக விளையாடிய யாஷ்துல் தனது அறிமுக போட்டியிலேயே அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்து அசத்தினார்.
குறிப்பாக தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் பலம் வாய்ந்த தமிழ்நாடு அணியின் பந்து வீச்சாளர்களை மிக லாவகமாக கையாண்ட யாஷ்துல் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி குறித்து பேசிய யாஷ் தூல்…
இந்த நிலையில் இளம் வீரர் யாஷ் தூல், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவர் குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், நான் விராட் கோலியை நேரில் சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக உள்ளேன், அவர்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அவரை தான் நான் பின்பற்றுகிறேன், அவரிடம் பேசவேண்டும் அவரிடமிருந்து நிறைய அறிவுரைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.குறிப்பாக இக்கட்டான நிலையிலும் எப்படி சிறப்பாக பேட்டிங் செய்வது..? எப்படி மனதை அமைதியாக வைத்துக் கொள்வது..? எப்படி உடற்தகுதி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், என்பது குறித்து விராட் கோலி இடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். நானும் u-19இந்திய அணியை வழி நடத்தி உள்ளேன், ஆனால் விராட் கோலி வழிநடத்திய விதம், அவர் சக வீரர்களை கையாண்ட விதம் மிகவும் அற்புதமாக உள்ளது. அவரிடம் எப்படி ஒரு அணியை மற்றும் சக வீரர்களை நெருக்கடி இல்லாமல் வழி நடத்த வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று யாஷ் தூல் பேசியிருந்தார்.
மேலும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் குறித்து பேசிய யாஷ் தூல், ரிஷப் பண்ட் எப்பொழுதும் உற்சாகமூட்டும் வகையில் பேசிக்கொண்டே இருப்பார், அவர் ஒரு சிறந்த கேப்டன் அவரிடமிருந்து நான் தலைமைத்துவத்தை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் ஒரு எனர்ஜெடிக் வீரர், விக்கெட் கீப்பராக இருந்துகொண்டு போட்டியை ரசித்து சக வீரர்களை உற்சாகப் படுத்துவது மிகவும் அற்புதமாக இருக்கும் என்று ரிஷப் பண்ட்டை பாராட்டி யாஷ் தூல் பேசியுள்ளார்.