பேட்டிங்கிலும் ஹைதராபாத்தை கதறவிட்ட கொல்கத்தா வீரர்கள்… 14 ஓவரில் முடிவுக்கு வந்த போட்டி; இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது கொல்கத்தா
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான முதல் குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் கொல்கத்தா – ஹைதராபாத் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, பேட்டிங்கில் பெரிதாக சோபிக்க முடியாமல் தடுமாறி வெறும் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ராகுல் த்ரிபாதி 55 ரன்களும், கிளாசன் 32 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஈசியான இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான குர்பாஸ் (23) மற்றும் நரைன் (21) ஆகியோர் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், அடுத்ததாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அசுர வேகத்தில் ரன்னும் சேர்த்தது.
பயமே இல்லாத தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி, பாரபட்சமே இல்லாமல் ஹைதராபாத் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை பிரித்து மேய்ந்தது.
வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 51* ரன்களும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 58* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 13.4 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கெத்தாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.