இல்ல இல்ல.. தோனியவிட கோஹ்லி தான் அந்த இடத்திற்கு கரெக்ட் – கம்பீரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த இர்பான் பதான்!
2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான முன்னாள் கேப்டன் தோனி, துவக்கத்தில் மிடில் ஆர்டரில் இறங்கி சரியாக ஆடவில்லை. பின்னர் 2005ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 3வது இடத்தில் இறக்கிவிட்டார் கேப்டன் கங்குலி. அந்த போட்டியில் 148 ரன்கள் அடித்த தோனி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததால், அதன்பின்னர் இலங்கை தொடரிலும் 3வது இடத்தில் இறக்கப்பட்டார். அதில் 183 ரன்களை குவித்தார் தோனி.
அதன்பிறகு, தொடர்ச்சியாக 3வது இடத்தில் இறங்கி சதங்களை விளாசிவந்த தோனி, 2007ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு, 3ஆம் இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வந்தார்.
2009ல் இந்தியாவிற்கு ஆடத்துவங்கிய விராட் கோலியை 3வது இடத்தில் ஆடவைத்தது பலன் அளித்ததால், அவருக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு தோனி பின்வரிசையில் இறங்கி வந்தார். அதிலும் சிறப்பாக செயல்பட்டு பெஸ்ட் ஃபினிஷர் என்று பெயர் பெற்றார் தோனி. இதுவரை 350 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள 50.53 என்ற சராசரியுடன் 10,773 ரன்களை குவித்துள்ளார்.
தோனியிடம் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், தோனி தொடர்ச்சியாக 3வது இடத்திலேயே களமிறங்கி இன்னும் பல சரித்திரம் பேட்டிங்கில் மட்டுமே படைத்திருப்பார். தோனியை கிரிக்கெட் உலகம் வேறுவிதமாக பார்த்திருக்கும் என்று சமூகவலைத்தளத்தில் இர்பான் பதானுடனான உரையாடலில் கம்பீர் தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த இர்பான் பதான், “தோனி நினைத்திருந்தால், தொடர்ச்சியாக 3வது இடத்தில் ஆடியிருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அதேநேரம், தோனி, கோஹ்லி இருவரையும் ஒப்பிட்டால், 3வது இடத்திற்கு டெக்னிக்கின் அடிப்படையில் கோலி மட்டுமே சரியான வீரர் என்று உறுதியாக நம்புகிறேன். கிரிக்கெட்டில் தோனி ஒரு லெஜண்ட். ஆனால், விவாதம் 3வது இடத்திற்கு என்பதால், தோனியை விட கோலி தான் சரியான வீரர் என நான் நினைக்கிறேன்.” என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.