ஆஷஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்த ஜோப்ரா ஆச்சர் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே மாதம் இறுதியில் துவங்கி கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்தது. இதில் முதல் முறையாக இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றது.
பார்படாசில் பிறந்து வளர்ந்த ஜோப்ரா ஆச்சர் கடந்த மூன்று வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வந்து குடியுரிமை பெற்றதால், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆடுவதற்காக தகுதி பெற்றார். ஆதலால், உலக கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான தொடரில் முதன் முதலாக இங்கிலாந்து அணிக்கு ஆடுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டார்.
அங்கு சிறப்பாக செயல்பட்டு, உலக கோப்பை அணியில் இடம் பெற்றார். உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் ஆடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு முதல் முறையாக டெஸ்ட் அணியில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஜூலை 24ஆம் தேதி நடக்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருந்தது. ஆனால், காயம் காரணமாக அவரால் ஆடமுடியாதது உறுதியாகியுள்ளது. தற்போது ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலும் உடல் தகுதி பெறாததால் ஆடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
உலக கோப்பை தொடரின் லீக் போட்டியின் போதும் பக்கவாட்டு காயம் காரணமாக ஆர்ச்சர் அவதிப்பட்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டு வலியை கட்டுப் படுத்தி தொடர்ந்து ஆடி வந்தார். இது தற்போது தீவிரமாக உள்ளதால் சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார். ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது அணியில் இணைவார் என தெரிகிறது.