பவர்-பிளே ஓவர்களில் இந்த விதிமுறையை ஐசிசி மாற்ற வேண்டும் என தென்னாபிரிக்காவின் ஜாம்பவான் ஜாக்குவாஸ் காலிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் அண்மையில் நடந்து முடிந்தது, இதில் தொடரை நடத்திய நாடான இங்கிலாந்து அணி முதன் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த உலக கோப்பை தொடருக்கு ஒவ்வொரு நாடுகளிலும் இரண்டு ஜாம்பவான்கள் தூதராக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஐசிசி நிர்வாகத்தின் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்டனர். இவர்களின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று, உலக கோப்பை தொடரை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்வதாகும்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு தூதராக முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் ஜாக்குவஸ் காலிஸ் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் ஒருநாள் போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவதையும் அதில் மாற்றம் கொண்டுவரவும் சில ஆலோசனைகளை கோரிக்கைகளாக ஐசிசி விதிமுறை குழுவிற்கு அளித்திருந்தார்.
இவர் கூறுகையில், ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 11 ஓவர் முதல் 40 ஓவர் வரை நான்கு வீரர்கள் மட்டுமே 30 யார்டிற்கு வெளியே நிற்க வேண்டும். இந்த விதிமுறையால், பேட்டிங் செய்வதற்கு சாதகமான பிளாட் ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு ஐந்து பீல்டர்கள் வெளியே நிற்கலாம் என்ற பழைய முறையை மீண்டும் அமலுக்கு எடுத்துவர வேண்டும்.
பந்து வீச்சாளர்களே எத்தனை வீரர்கள் 30 யார்டிற்கு மேல் வெளியே நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த ஒரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன். இது நடந்தால் பந்து வீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆடுகளங்கள் 350 ரன்களுக்கு மேல் அடிப்பதற்கு சாதகமானதாக இருக்கக்கூடாது’’ என்றார்.