இந்த தொடரை நான் ரொம்ப நம்புனேன்.. ஆனா என்ன ரொம்ப ஏமாத்திருச்சு; இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடர் நடக்கும் என நம்பினேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டது என மனம் திறந்து பேசியுள்ளார் கே எல் ராகுல்.
கொரோனா வைரஸால் கிரிக்கெட் ரசிகர்கள்; குறிப்பாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் நடக்காமல் போனதால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அக்டொபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. தற்போதுள்ள இக்கட்டான சூழலில், 16 நாடுகளின் வீரர்களை வரவழைத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்து தொடரை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
ஒருவேளை டி20 உலகக்கோப்பை நடக்காமல் போனால், அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்தி ரசிகர்களை மகிழ்விக்க பிசிசிஐ திட்டமிடுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த நேரலையில், இந்திய வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல், விண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் கெயில் என பஞ்சாப் வீரர்கள் நேரலையில் பங்கேற்றனர். அதில் ஐபிஎல் போட்டி நடக்காதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல்.
‘‘ஐ.பி.எல்., தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன். ஏனெனில் இம்முறை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால், இது எனக்கு மிகவும் முக்கியமான தொடராக பார்க்கிறேன். பஞ்சாப் அணியில் கெய்ல், மேக்ஸ்வெல், அகர்வால் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பு. இவர்களை வழிநடத்த இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இத்தொடரை ‘மிஸ்’ செய்கிறேன்,’’ என்றார்.
டி20 உலகக்கோப்பை நடக்காமல் போகும் பட்சத்தில், மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் பணியாளர்களை மட்டும் வைத்து ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசித்து வருகிறது. ஜூலை இரண்டாம் வாரத்திற்குள் உலகக்கோப்பை நடக்குமா? இல்லையா? என்பது உறுதியாகி விடும்.
அதன்பிறகு, ஐபிஎல் குறித்த ஆலோசனை பிசிசிஐ உறுப்பினர்கள் மத்தியில் நடக்கும் என தெரிகிறது.