நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் இந்திய அணி, நியூசிலாந்திடமும், பாகிஸ்தானிடமும் போராட கூட முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கதவுகள் ஏறக்குறைய அடைக்கப்பட்டுவிட்டன. இந்த தொடரில் இந்திய அணி மீது ரசிகர்கள் வைத்திருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையும் வீணாகிவிட்டாலும், அடுத்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாகவாவது இந்திய அணியில் உள்ள குறைகள் சரி செய்யப்பட வேண்டும் என ரசிகர்கள் காத்துளனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் கூறியுள்ளன.
கோலி, ரோஹித் சர்மா, பும்ராஹ் போன்ற இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதே போல் இந்தியா – நியூசிலாந்து இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.