இனி தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுப்பது குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்கப்படாது. அவரும் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உலக கோப்பை தொடர் முடிவுற்றவுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஆகியோரின் பணிக் காலமும் முடிவடைந்துள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து வந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் மட்டும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், உடனடியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் துவங்க இருப்பதால் அதற்குள் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்து நியமிப்பது கடினம் என்ற அடிப்படையில் இந்த நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களான சஞ்சய் பாங்கர் மற்றும் பரத் ஸ்ரீதர் இருவருக்கும் எவ்வித நீட்டிப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் உட்பட மூன்று பதவிகளுக்கும் வர விரும்புபவர்கள் விண்ணப்பம் மூலம் விருப்பத்தை தெரிவித்து அதன் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கு பெறலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. மேலும் தற்போது பதவியில் இருக்கும் ரவி சாஸ்திரி, சஞ்சய் பாங்கர் மற்றும் பரத் மூவரும் மீண்டும் இப்பதவிக்கு வர விரும்பினால், விண்ணப்பித்து வரலாம். இவர்களுக்கு முதல் இரண்டு சுற்றுகள் இருக்காது. நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதையும் பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்த விண்ணப்பங்களை ஆலோசிக்கும் குழுவானது கபில்தேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ரவிசாஸ்திரியை தேர்வு செய்கையில், இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியுடன் ஆலோசனை கேட்கப்பட்டது. ஆனால், இம்முறை அதுபோல் நடக்காது. விராட் கோலியும் இந்த பயிற்சியாளர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது எனவும் பிசிசிஐ கண்டித்துள்ளது.
பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் முழு பொறுப்பும் கபில் தேவ் மற்றும் அவரின் குழுக்களுக்கு இருக்கும் என்ற அதிகாரத்தையும் பிசிசிஐ வழங்கியிருக்கிறது.